ஆண்டிபட்டி தனியார் பள்ளியில் நடந்த பட்டமளிப்பு விழா..பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சி!
ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் 12 வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பாண்டி செல்வம் தலைமை தாங்கினார் . பள்ளியின் நிர்வாக இயக்குனர்கள் கபில், டாக்டர் வாகினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கல்வி அலுவலர் பாலமுருகன் ,திண்டுக்கல் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் ராதாகிருஷ்ணன், தொழிலதிபர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி பாராட்டி பேசினார்கள். காரைக்குடி குரல் சூடி உமையாள் மெய்யம்மை அவர்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினார்.
பிரைமரி படித்து தொடரும் பிள்ளைகளுக்கு பட்டமளிப்பும், அதேபோல் ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பட்டமளிப்பும் வழங்கப்பட்டது. மேலும் தொழிலதிபர்கள் சுதந்திரராஜன், லயன் சரவணகுமார், கணேஷ், மாதவன் ,மாரிச்சாமி, ஈஸ்வரன், மைக்கேல் அருள்ராயன், ஜெயபாரதி மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் . கல்வி ஆலோசகர் நியூட்டன் தீபக், துணை முதல்வர் லதா ஆகியோர் தொகுத்து வழங்கி, ஆண்டறிக்கை வாசித்தனர் .
விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. குறிப்பாக லேசர் மின்னொளி வெளிச்சத்தில் மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் மாணவர்களின் யோகா, பிஞ்சுக் குழந்தைகளின் ஆடல், பாடல் சிறப்பாக அமைந்திருந்தது. ஆசிரியர் அருணா நன்றி கூறினார்.