வேலை வாங்கி தருவதாக தி.மு.க. பிரமுகர் மோசடி: போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வெள்ளப் பொம்மன்பட்டியை சேர்ந்த தம்பதி கருப்புச்சாமி மற்றும் இவரது மனைவி வேலுமணி . இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் கருப்பச்சாமி விபத்தில் இறந்து விட்டார்.
இந்த நிலையில் வேலுமணி லாரி புக்கிங் ஆபீசில் வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.
வேலுமணியிடம் ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் இளங்கோ ரூ.1 லட்சம் வாங்கி உள்ளார் என கூறப்படுகிறது.இதையடுத்து 2 ஆண்டுகள் ஆன பின்பும் இளங்கோ வேலை வாங்கித் தராமல் வேலுமணியை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் இது குறித்து அவரிடம் கேட்டபோது தான் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறினார் என்றும் ஆனால் பணத்தையும் தராமல் ஏமாற்றினார் என தெரிவித்துள்ளார்.இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வேலுமணி புகார் அளித்தார்.இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் வடமதுரை போலீசார் தி.மு.க. பிரமுகர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் 2 ஆண்டுகளாக தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிய இளங்கோவை கைது செய்யாமல் போலீசார் அலைக்கழிப்பதாகவும் தனக்கு பணம் கிடைக்கவில்லை என கூறி 2 குழந்தைகளுடன் இன்று வடமதுரை போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் அவர் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.