மணவெளி தொகுதியில் போட்டியிட தயாரா? நாராயணசாமிக்கு சபாநாயகர் செல்வம் சவால்!
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மனவெளி தொகுதியில் போட்டியிட தயாரா என சபாநாயகர் செல்வம் சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபை கூட்டம் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது . அப்போது அந்த கூட்டத்தில் அரசின் 2024-25ம் நிதியாண்டின் கூடுதல் செலவுகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து அதன்பின் காலவரையின்றி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பட் ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.
வரும் மார்ச் 10-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்குகிறது என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும் 12 -ஆம் தேதி அன்று 9.30 மணிக்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.
மேலும் பேசிய சபாநாயகர் செல்வம் சமீபத்தில் சபாநாயகர் டெபாசிட் இழப்பார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவரது சொந்த ஊரான மனவெளி தொகுதியில் போட்டியிட தயாரா என சபாநாயகர் செல்வம் சவால் விடுத்துள்ளார், அப்படி போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார் என கூறினார்.
மேலும் இந்த முழு பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சலுகைகளுடன் கூடிய பட்ஜெட் தயாரிக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
எனவே பட்ஜெட்டில் ஏராளமான வரிச்சலுகைகள், இலவச அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. இந்த கூட்டத் தொடரை ஒரு மாத காலம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது .
சட்டசபை நடவடிக்கைகளை காகித பயன்பாடு இல்லாததாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.