செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் இந்திய நிறுவனங்கள் உலகிலேயே முதன்மையாக இருக்கின்றன  

Loading

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் இந்திய நிறுவனங்கள் உலகிலேயே முதன்மையாக இருக்கின்றன  

செயற்கை நுண்ணறிவு சமூக வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ளது. பல்வேறு பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மக்களின் அன்றாட நடவடிக்கைகளை எளிமையாக்கி வருகிறது.  இதற்கு தொழில் நிறுவனங்களும் விதிவிலக்கு அல்ல என்பது தெளிவு.

பாஸ்டன் ஆலோசனை குழுமம் தொகுத்த அண்மைக்கால அறிக்கையின்படி, நாட்டில் 80 சதவீத தொழில் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றன. இது உலகளாவிய சராசரியான 75 சதவீதத்தை விஞ்சியுள்ளது. மேலும் இந்த தொழில் நிறுவனங்களில் 69 சதவீதம் இந்த ஆண்டு தொழில்நுட்ப முதலீட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு முன்முயற்சிகளில் 25 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை ஒதுக்க இந்த நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. விரிவான டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி நாடு செல்கிறது என்பதை இது பிரதிபலிக்கிறது.

இந்தியாவின் பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது வேகமாக அதிகரித்து வருகிறது. ரேன்ட்ஸ்டர்டு ஏஐ & ஈக்விட்டி அறிக்கை 2024 தகவல்படி பணியிடங்களில் 10 ஊழியர்களில் ஏழுபேர் ஏதாவது ஒரு வடிவத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர். 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பத்தில் ஐந்தாக இருந்தது.

இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களில் 78 சதவீதம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதாகவும், இதனால் வருவாய் அதிகரித்திருப்பதாகவும் சேல்ஸ்ஃபோர்ஸ் அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, 93 சதவீத நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு  தங்களின் வருவாய் அதிகரிப்புக்கு உதவிசெய்துள்ளது என்று கூறியுள்ளன.

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சந்தை அபரிமிதமான வளர்ச்சிப் பெற்றுள்ளதாக நாஸ்காம் அறிக்கை தெரிவிக்கிறது.  புதிய கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்பு திறனுடன் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தரவு அறிவியல், எந்திர கற்றல் போன்றவற்றால்  இந்தத்துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

செயற்கை நுண்ணறிவின் அதிகரித்து வரும் பயன்பாடுகளை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மோடி அரசு மூன்று செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் குறித்த அறிவிப்பை 2023-ல் வெளியிட்டது. தொடர்ச்சியான தேவையை கருத்தில் கொண்டு 2025 பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் கல்விக்கான புதிய செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம் பற்றி அரசு அறிவித்துள்ளது.

திறன் வளர்ப்பு, தொழில்துறைக்கு பொருத்தமான நிபுணத்துவத்துடன் ஐந்து தேசிய சிறப்பு மையங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தியாவில் உற்பத்தி, உலகிற்கான உற்பத்தி திட்டங்களின் ஆதரவுடனும், உலகளாவிய பங்களிப்புடனும் இந்த மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

0Shares