அசல் ஆவணங்கள் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.

Loading

அசல் ஆவணங்கள் தொலைந்தாலும் பத்திரப்பதிவு.. பதிவுத்துறைக்கு பெயிரா பாராட்டு.

அசல் பத்திரம் தொலைந்தாலும் பதிவு செய்யலாம், பதிவுத்துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணங்களின் அடிப்படையில் சொத்து சம்பந்தமான ஆவணங்களை சரி பார்த்து பதிவு செய்யலாம், அதற்கு அசல் பத்திரம் இனி தேவையில்லை என நீதிமன்றங்களின் உத்தரவை பின்பற்றக் கோரி உத்தரவு பிறப்பித்துள்ள தமிழ்நாடு பதிவுத்துறைக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..
தமிழ்நாட்டில் சொத்து சம்பந்தமான அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும் சம்பந்தப்பட்ட நிலங்களை பத்திர பதிவு செய்யலாம் என்கின்ற வரலாற்று சிறப்புமிக்க கூடுதல் பதிவுத்துறை தலைவர் அவர்களின் கடிதத்தை வரவேற்று, பொதுமக்கள் மற்றும் பெயிரா கூட்டமைப்பின் சார்பாக நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த 2022ஆம் ஆண்டு பதிவுத் துறை சட்டப்பிரிவு 55(A) இன் படி அசல் ஆவணங்கள் இல்லாமல் பத்திர பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையை அடுத்து, பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக தங்கள் கைவசம் அசல் ஆவணங்களில்லாத பொதுமக்கள் பதிவு அலுவலகத்தில் தங்களது சொத்துக்களை வாங்கவும், விற்கவும் முடியாத கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

மேலும் பொதுமக்கள் தங்களது சொத்திற்கான அசல் ஆவணங்களை தவறவிட்டாலோ, களவு போனாலோ அல்லது பறி கொடுத்தாலோ 55(A) சட்ட பிரிவில் குறிப்பிட்டுள்ள சட்ட விதிகளின்படி, அது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட காவல்துறையில் புகார் கொடுத்து தினசரி நாளிதழ்களில் அது குறித்து விளம்பரம் வெளியிட்டு காவல்துறையிடம் இருந்து. (NON TRACEANLE CERTIFICATE) கண்டுபிடிக்க முடியாத சான்று பெற்று வந்தால் தான் பதிவு செய்ய இயலும் என்கிற சட்ட வழிமுறைகள் மற்றும் காவல்துறையினரின் விசாரணை என்கின்ற பெயரில் ஏற்படும் காலதாமதத்தின் காரணமாக, அத்தியாவசிய பொருளாதார தேவைகளுக்கு கூட தங்களுடைய சொத்துக்களை விற்க முடியாத சூழல் உருவாகி மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு பொதுமக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் நலிவடைந்து பல இன்னல்களை அனுபவித்து வந்தனர்.

பதிவுத் துறையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 55(A) சட்ட பிரிவின் காரணமாக பொதுமக்கள் எதிர்கொண்டு வந்த பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பொது ஆவணங்களின் (Public Document) அடிப்படையில், ஆவணங்களை பதிவு செய்ய வழிவகை வேண்டும் எனவும், மேலும் பதிவுத்துறையின் பல்வேறு பாதுகாப்பான நடைமுறைகளையும், வழிகாட்டு சுற்றறிக்கைகளையும் சுட்டிக்காட்டி FAIRA கடித எண்:017/2022 தேதி:18.11.2022. FAIRA கடித எண்:013/2023 தேதி: 11.05.2023 மற்றும் FAIRA கடித எண்:045/2024 தேதி:12.11.2024 ஆகிய கடிதங்களின் வாயிலாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக பதிவுத் துறையினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு பல்வேறு சூழ்நிலைகளில் அசல் ஆவணங்களை இழந்த பொதுமக்கள் பலர் உயர் நீதிமன்றங்களின் உதவியை நாடி, அசல் ஆவணங்கள் இல்லை என்றாலும், பதிவுத்துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணங்களின் அடிப்படையில் பதிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அசல் ஆவணங்கள் இல்லை என்றாலும் பதிவுத்துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணங்களின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கி உத்தரவினை பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து பதிவுத் துறையின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து பதிவுத்துறை சார்பில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை தள்ளுபடி செய்தது.

உயர் நீதிமன்ற வழக்கு எண் W.P.NO..242/2024 & W.A.NO. 1160/2024
உச்சநீதிமன்ற வழக்கு எண் SLA.2344/2025

மேலும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் துணை நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் அசல் ஆவணங்கள் இன்றி பத்திரப்பதிவு செய்யலாம் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அமல்படுத்த வேண்டும் என்று பதிவுத்துறை கூடுதல் துணைத் தலைவர் அவர்கள் கடித எண்:44420/C1/2024,Dt.05.02.2025 வாயிலாக உத்தரவினை பிறப்பித்து அனைத்து மண்டல துணை அலுவலர்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும், சார்பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள பதிவுத் துறையின் செயலினை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு பாராட்டி வரவேற்கின்றது.

எனினும் பதிவுத் துறையால் அனுப்பப்பட்ட மேற்கண்ட கடிதத்தினை அடிப்படையாகக் கொண்டு, அசல் ஆவணங்கள் இல்லாமல் ஆவண பதிவினை மேற்கொள்ள சார் பதிவாளர்கள் பலர் மறுக்கின்றனர். இதற்கு காரணம் கடித்ததில் குறிப்பிட்டுள்ள சாராம்சங்கள் குறித்த தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினாலும் மேலும் பதிவு செய்வதன் காரணமாக எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்கின்ற அச்ச உணர்வின் காரணமாகவும் பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்கின்றனர்.

ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத் துறை தலைவர் அவர்கள், இந்த பிரச்சனையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வது சம்பந்தமாக சார் பதிவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில், சரியான வழிகாட்டுதலுடன் கூடிய தெளிவான சுற்றறிக்கையினை தாங்கள் வெளியிட்டு தீர்வு காண உதவிட வேண்டுமென பொதுமக்கள் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகோள் வைப்பதாக பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

0Shares