பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்

Loading

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் 10 ஆண்டுகள் – பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு உந்துசக்தி

– திருமதி அன்னபூர்ணா தேவி
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா நம்பிக்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் தாக்கம், பெண்கள் முன்னேற்றம் என்ற நிலையில் இருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற நிலைக்கு மாறியிருப்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.
உலகம் முன்னேற பெண்களின் நிலை மேம்பட வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். இந்த காலத்தால் அழியாத தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி 2015 ஜனவரி 22 அன்று ஹரியானா மாநிலம் பானிபட்டில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (BBBP) திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த மைல்கல் முயற்சி இந்தியாவில் குறைந்து வரும் குழந்தை பாலின விகிதத்தை (சி.எஸ்.ஆர்) நிவர்த்தி செய்யவும், நாடு முழுவதும் உள்ள சிறுமிகள், பெண்களுக்கு அவர்களுக்கு தகுதியான வாய்ப்புகளும், கண்ணியமும் கிடைப்பதை உறுதி செய்யவும் தொடங்கப்பட்டது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு 918 பெண் குழந்தைகள் என்ற எண்ணிக்கையில் பாலின விகிதம் இருந்தது. பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலமாகவும், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் மூலமாகவும், இதனை மாற்றியமைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில், இந்த திட்டம் குறிப்பிடத்தக்க பலன்களை வழங்கியுள்ளது. தேசிய பாலின விகிதம் 2023-24-ல் 930 ஆக உயர்ந்துள்ளது. முறையாக மருத்துவமனைகளிலோ, சுகாதார மையங்களிலோ மேற்கொள்ளப்படும் பிரசவங்கள் 2014-15-ம் ஆண்டில் 61% ஆக இருந்தது. இது 2023-24-ம் ஆண்டில் 97.3% ஆக உயர்ந்துள்ளது.
இடைநிலைக் கல்வியில் சிறுமிகளின் மொத்த சேர்க்கை விகிதம் 2014-15-ல் 75.51% ஆக இருந்த நிலையில், 2021-22-ல் அது 79.4% ஆக உயர்ந்தது. பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கம் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களின் திறன் மேம்பாடு, தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் தீவிர பங்கேற்பு ஆகியவையும் ஊக்குவிக்கப்படுகின்றன.
2023-2024-ம் நிதியாண்டில், இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்களிப்பு 41.7% ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது என்றாலும், இது ஆண்களின் தொழிலாளர் பங்கேற்பை விட குறைவாகவே உள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட வேண்டுமானால், நமது தேசக் கட்டமைப்பு முயற்சிகளில் சிறுமிகளும், பெண்களும் முக்கிய பங்காற்றுவதை உறுதி செய்வது கட்டாயமாகும்.
உலக பொருளாதார மன்றத்தின் கூற்றுப்படி, தொழிலாளர் பாலின இடைவெளியை அகற்றுவது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 20% அதிகரிக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, இது ஒரு தேவை ஆகும்.
பிரதமரின் தொலைநோக்கு தலைமையின் கீழ், வரலாற்று மாற்றத்தை நாம் காண்கிறோம். பெண்களின் முன்னேற்றம் முதல் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி வரை, இந்தியாவின் மகள்கள் மாற்றத்தை உருவாக்குபவர்களாக, தொழில்முனைவோராக, தலைவர்களாக உயர்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த வளர்ச்சிக் கதையின் தலைவர்களாக மாறுகிறார்கள். இந்தியா சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, பெண்களின் முன்னேற்றப் பயணத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம்.

0Shares