ஆலோசனைக் கூட்டம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்பு  

Loading

என். எல்.சி. இந்திய நிறுவனத்தின் நிலப்பறிப்பை தடுத்தல் ஆலோசனைக் கூட்டம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பங்கேற்பு          பண்ருட்டி, மார்ச்.27 – கடலூர் மாவட்டம் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான கருத்தரங்கம் உழவர் பேரியக்கம் சார்பில் நெய்வேலியில் நடைபெற்றது. அந்த கருத்தரங்கத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கலந்து கொண்டு பேசியதாவது, “15, 20 வருடங்களுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு விலை கொடுக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையாகவும் இருந்தது. அப்பொழுது எங்களுக்கு புரியவில்லை, இப்பொழுது தான் எங்களுக்கு புரிய வந்திருக்கிறது. அன்றைக்கு எங்களுக்கு தெரிந்ததெல்லாம் நிலம் கொடுத்து விட்டார்கள், அவர்களுக்கு நல்ல வேலை கொடுக்க வேண்டும் என்பது தான். ஒன்றரை லட்சம் ரெண்டு லட்சம் என்றார்கள் நாங்கள் ஐந்து லட்சம், ஆறு லட்சம் கொடுக்க வைத்தோம். அன்று நான் அமைச்சராகவும் இருந்தேன், அன்று எனக்கு இவ்வளவு பெரிய பிரச்சனைகள் வரும் என்று தெரியவில்லை, இன்று எனக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் இன்றைக்கு, நாளை என்ன பிரச்சனை வரும் என்பது பலருக்கு புரியவில்லை, சில பேர் புரிந்த மாதிரி நடந்து கொள்கிறார்கள், சில பேர் புரிந்தும் புரியாத மாதிரி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்கு அனைத்து சங்கங்களையும் அழைத்திருக்கிறோம். வர்த்தக சங்கம், தொழிலாளர் சங்கம், வணிகர் சங்கம், விவசாய சங்கம், அரசியல் கட்சிகள், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் அனைவரையும் வர வைத்திருக்கிறோம். இவங்க யாருமே எங்களுக்கு பிரச்சனை இல்லை என்று ஒதுங்க முடியாது. அனைவருக்கும் என்.எல்.சி நிறுவனத்தால் பிரச்சனை இருக்கிறது.
சட்டமன்றத்தில் தொழிற்துறை அமைச்சர் பேசுகிறார். ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் தருவதாக சொல்கிறார். 23 லட்சம் தருவதாக சொன்னதை, 25 லட்சம் தருவதாக சொல்கிறார். 1800 பேருக்கு வேலை தருவதாக அவர் சொல்லவில்லை, 1800 பேருக்கு வேலை இருக்கிறது, அதற்கு போட்டி போட வேண்டும், அதில் இடம் கொடுத்தவர்களுக்கு 20 மார்க் கூடுதலாக கொடுக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார். அப்படி என்ன வேலை என்றால்? தின கூலி வேலை தான் அந்த வேலை. இன்று என் மண்ணில் நான் முதலாளி, அதை விட்டுவிட்டு  தினக்கூலியாக என்னை வேலை செய்ய சொல்கிறார்கள். இது என் பாட்டன் பூட்டன் வாழ்ந்த மண், இது என்னுடைய அடையாளம், என்னுடைய கோவில், என்னுடைய சாமிகள் இங்குதான் இருக்கின்றது. எங்கள் சுடுகாடு இருக்கிறது, எங்கள் பள்ளிக்கூடம் இருக்கிறது, என் முன்னோர்கள் வாழ்ந்த மண். இதை விட்டுவிட்டு நான் எங்கே செல்ல வேண்டும்?
விஜய மாநகரம் உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். இங்கிருந்த 37,000 ஏக்கரை 1956 இல் கொடுத்துவிட்டு, 25 ஆயிரம் மக்கள் மொத்தமாக ஒரே இரவில் அப்புறப்படுத்தப்பட்டார்கள். நாங்கள் போனால் எங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும், பகுதி வளர்ச்சி பெறும் என்று மொத்த பேரும் அன்று கிளம்பி விட்டார்கள். இன்றைய வரைக்கும் அந்த மக்களுக்கு துரோகம் தான் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் அது போன்ற ஒரு சூழல் உருவாகிட கூடாது என்று தான் நான் வந்திருக்கிறேன்.
15 ஆண்டுகளுக்கு முன்பு நானும் இதே கோரிக்கை தான் வைத்தேன். இன்று எனக்கு தெரிகிறது. 91 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் எடுக்கப் போகிறார்கள் 91 ஆயிரம் ஏக்கர் என்றால் நெய்வேலியில் இருந்து கொள்ளிடம் வடக்கு கரை வரை உள்ள இடம் அழிய போகிறது. இதனை சும்மா சொல்லவில்லை ஆதாரத்துடன் சொல்கிறேன்.
என் எல் சி வருகைக்கு முன்னர், நெய்வேலியில் இருந்த தன்னூற்று இன்று இல்லாமல் போய்விட்டது. உலகிலேயே ஆஸ்திரேலியாவிலும், நெய்வேலியிலும் தான் இருந்தது. இன்று நெய்வேலியில் இல்லாமல் போய்விட்டது. நிலத்தடி நீர் என்பது எட்டு அடியில் இருந்து ஆயிரம் அடிக்கு சென்று விட்டது. சில இடங்களில் 1200 அடி வரைக்கும் சென்றுவிட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இருக்கின்றது. இது ஏதோ 10, 15 கிராமங்களில் பிரச்சனை என்று நினைக்கிறார்கள், சுற்றியுள்ள ஐந்து மாவட்ட பிரச்சனை இன்று இதை தடுத்து நிறுத்தவில்லை என்றால் ஐந்து மாவட்டங்கள் பாதிக்கும்,
25 லட்சம் நிலத்திற்கு பணம் கொடுக்கிறோம், 1800 வேலை கொடுக்குறோம் என்கிறார்கள். நிலம் வைத்திருப்பவர்களுக்கு இதனை கொடுப்பார்கள். ஐந்து சதவீதம் மக்கள் மட்டுமே நிலம் வைத்திருக்கிறார்கள். நிலம் இல்லாதவர்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? அவர்களுக்கு வாழ்வாதாரம் என்ன? அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் எங்கே தங்குவார்கள்? அவர் எங்கே படிப்பார்கள்? அவர்கள் வாழ்வாதாரம் என்ன? அதுக்கு பதில் சொல்ல வேண்டாமா? விவசாயத்தை அழித்து வளர்ச்சி வேண்டாம், அது எவ்வளவு பெரிய வளர்ச்சியாக இருந்தாலும் எனக்கு தேவையில்லை.
எட்டு வழி சாலைக்காக நாம் தான் போராட்டங்களை நடத்தினோம். நாம் எத்தனை வழக்குகளை போட்டு உள்ளோம். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்க பல போராட்டங்களை நடத்தினோம். அதனை அமைக்க முன்னாள் முதலமைச்சரை சந்தித்து பல முயற்சிகள் மேற்கொண்டு கொண்டு வந்தோம். ஆனாலும் முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை. இப்போது இவர்கள் சொல்லும் திட்டமும் அந்த பகுதியில் தான் வருகிறது.
என்எல்சி ஒன்று மற்றும் இரண்டு சுரங்க விரிவாக்கத்திற்காக 13,000 ஏக்கர் நிலங்கள் விரைவில் எடுக்கப்பட இருக்கிறது. புதியதாக மூன்றாவது சுருங்கத்திற்கு 12000 ஏக்கர், மொத்தம் 25000 ஏக்கரை கைப்பற்ற இருக்கிறார்கள். அதன் பிறகு சேத்தியாதோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம். தனியாரிடம் கொடுப்பதற்கு ஏலம் கடந்த ஆண்டே விட்டுள்ளார்கள். நிலம் கையகப்படுத்தி கொடுக்க போவது யார் தெரியுமா? தமிழக அரசு. இதைத் தாண்டி ஐந்தாவது சுரங்கம் புதிய வீராணம் நிலக்கரி திட்டம். வீராணம் ஏரியை அருகே சுற்றி உள்ள பகுதிகளில் வருகிறது. நான்காவது சுரங்கத்திற்கு 21,000 ஏக்கரும், ஐந்தாவது சுரங்கத்திற்கு 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் எடுப்பதற்கு திட்டமிட்டு உள்ளார்கள். 200 ஆழ்துளை கிணறுகளை அமைத்து சோதனை செய்திருக்கிறார்கள். எம் இ சி எல் நிறுவனம் பல கோடிகள் செலவு பண்ணி இந்த சோதனை நடத்தி இருக்கிறது. இந்த சோதனைகளை நடத்த அனுமதி கொடுத்ததும் தமிழக அரசு தான்.
சட்டமன்றத்தில் ஒன்று பேசிக்கொண்டும், வெளியில் ஒன்று செய்து கொண்டும் இருப்பது சரியில்லை. இங்கு நான் அரசியல் பேச வரவில்லை. 91 ஆயிரம் ஏக்கரை கையகப்படுத்த திட்டம் வைத்திருக்கிறார்கள். நெய்வேலி இல்லை என்றால் தமிழ்நாடு இருண்டு விடும் என்று சொல்கிறார்கள். யாரை ஏமாற்ற சொல்கிறார்கள்? தமிழ்நாட்டின் அன்றாடம் தேவை 18 ஆயிரம் மெகாவாட், என் எல் சி நிறுவனம் கொடுப்பது 800 லிருந்து ஆயிரம் மெகாவாட் மட்டுமே .இதற்கு போய் நாம் நிலத்தைக் கொடுத்து விவசாயத்தை அழித்து ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும்? எனக்கு புரியவில்லை.
நேற்றைய முன் தினம் தமிழ்நாடு அரசு 2030க்குள் மாற்று எரிசக்தி மூலம் 15 ஆயிரம் மெகாவாட் உருவாக்குவோம் என அறிவித்திருக்கிறார்கள். சோலார் நீரேற்று முறை மூலமாக 15,000 மெகாவாட் இன்னும் ஏழு வருடத்தில் உருவாக்கினால், தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறிவிடும்.  அதற்கு ஏன் நிலம் எடுக்க வேண்டும்? என்ன தேவை இருக்கிறது?என்எல்சி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யப்போகிறார்கள். அடுத்த வருடம் விற்பனை செய்வதற்கு, தனியாருக்கு நிலத்தை ஏன் கையகப்படுத்த வேண்டும். ஒரிசாவில் ஜார்க்கண்டில் சத்தீஸ்கரில் பார்த்திருக்கிறேன். அங்குள்ள பழங்குடி மக்களின் நிலை பாவமாக இருக்கிறது. இங்கே விழிப்புணர்வான விவசாயிகள் அமைப்புகள் எல்லாம் இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் களம் இறங்கினால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
காலநிலை மாற்றத்தில் இருந்து நாம் தப்பிக்க வேண்டும் என்றால், நிலங்களை பாதுகாக்க வேண்டும் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். ஆனால் அதனை புரிந்து கொள்ளாமல் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், அமைச்சரின் சொந்த ஊரே இதில் எடுக்க போகிறார்கள்.
காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள், ராணுவத்தை வேண்டுமானாலும் கூட்டி வாருங்கள், எங்களை எதுவும் பண்ண செய்ய முடியாது. நாங்கள் தற்போது அமைதியாக பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படியும் எங்களுக்கு போக தெரியும். ஒரு நாள் தான் நான் கோரிக்கை வைத்தேன். ஒரே நாள் கோரிக்கையில் 90% கடைகளை மூடி ஆதரவளித்தார்கள். அவர்களுக்கு தலை வணங்குகிறேன், பாராட்டுகிறேன். உங்களுடைய உணர்வு தெரிகிறது, பிரச்சனை உங்களுக்கு புரிகிறது. இது விவசாயிகள் பிரச்சனை அல்ல. நம் மண் சார்ந்த பிரச்சனை. நம் எல்லோருடைய பிரச்சினை என்பது உங்களுக்கு புரிகிறது. வாழ்வாதாரப் பிரச்சினை என்பது உங்களுக்கு தெரிகிறது.
பழுப்பு நிலக்கரியை எரிப்பதன் மூலம் சல்பர் டைஆக்சைடு, கார்பன் டைஆக்சைடுபோன்ற மோசமான வாயுக்கள் தான் வெளிவரும். இதன் மூலம் ஆஸ்துமா கேன்சர் போன்ற நோய்கள் தான் அதிகமாகும். பழுப்பு நிலக்கரி என்பது தரம் குறைந்த நிலக்கரியாகும். தமிழக அரசின் காலநிலை கொள்கை 2040 க்குள் சுழிய கரியமில வெளியீடு என்று சொல்கிறார்கள். ஆனால் நிலக்கரியை எரிக்க நிலத்தினை கையகப்படுத்த வருகிறார்கள்.
மக்கள் துணிச்சலாக இருக்கிறார்கள். காவல்துறைக்கு எல்லாம் அவர்கள் பயப்பட மாட்டார்கள். இது  வருங்கால பிரச்சனை, அதற்காக நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களமிறங்க வேண்டும். 10 வருடத்தில் உணவு பற்றாக்குறைவரும். காலநிலை மாற்றத்தின் காரணமாக இன்னும் இந்த பிரச்சனை எல்லாம் 50 வருடங்களுக்கு பிறகு வரும் என நான் எதிர்பார்த்திருந்தேன் நினைத்திருந்தேன். ஆனால் தற்பொழுது ஆரம்பித்து விட்டது. காலநிலை அகதிகளாக போகப் போகிறோம் என் எல் சி க்கு நிலம் கொடுத்தவர்கள் எல்லாம் காலநிலை அகதிகள் தான்.
எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் 10 முறைக்கு மேல் கைதாகி இருக்கிறார்கள். ஒரு போன் செய்தால் போதும், கட்சியில் அவ்வளவு பேர் கைதாகி இருக்கிறார்கள். நீங்களும் எல்லோரும் வாருங்கள், ஸ்டெர்லைட் ஸ்டெர்லைட் என்று போராடி மூட வைத்தோம், அதனைவிட 100 மடங்கு மோசமான பிரச்சனை என் எல் சி யால்  நடந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய ஆதரவு மட்டுமல்ல, பங்களிப்பும் வேண்டும். நீங்கள் அனைவரும் வரவேண்டும்” என கேட்டுக்கொள்கிறேன். என்றார் அவர்
0Shares

Leave a Reply