விவசாயிகளிடம் உரையாற்றும் காணொளி நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பாரத பிரதமரின் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் 13 வது தவணையை 8 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு விடுவித்து இணைய வழியாக விவசாயிகளிடம் உரையாற்றும் காணொளி நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் விவசாயிகள்,விஞ்ஞானிகள் கலந்துரையாடலும் நடைபெற்றது. சி.பானுமதி விவசாயிகளை வரவேற்று,வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் அளிக்கப்படும் சேவைகள் மற்றும் சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட பயிர் இரகங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.வேளாண் துறை துணை அலுவலர் ஸ்ரீ சிவசங்கரி துறையின் மூலம் கலைஞர் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். வேளாண் துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பயிற்சிகளில் பயன்பெற ” உழவன் செயலி” மூலம் பதிவு செய்து பயன் பெறுதல் குறித்து ம.செந்தில்குமார் செயல் விளக்கம் செய்து காட்டினார்.மேலும் சிறுதானிய இரகங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள்,இயற்கை முறையில் கீரை, காய்கறி சாகுபடி முறைகள், நெல்,மிளகாய் மற்றும் காய்கறி பயிர்களில் பூச்சி மேலாண்மை குறித்தும் விதை உற்பத்தி முறைகள்,இயற்கை விவசாயம் குறித்த தொழில் நுட்பங்கள் பற்றியும் விஞ்ஞானிகள் பேசினர்.விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேவையான தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் – விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.