நடிகை கவுதமி நாயர் திடீர் விவாகரத்து
2012ல் துல்கர் சல்மானுடன், ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி நாயர். தொடர்ந்து டைமண்ட் நெக்லஸ், கூதரா, கேம்பஸ் டைரி, 2018 உள்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘விரித்தம்’ என்ற படத்தை முதல் முதலாக டைரக்ட் செய்தார். இந்தநிலையில், அவரது முதல் படமான ‘செகண்ட் ஷோ’வை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரனுடன் காதல் மலர்ந்தது. பல வருட காதலுக்கு பிறகு கடந்த 2017ம் ஆண்டு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, கணவர் ஸ்ரீநாத் ராஜேந்திரனை விவாகரத்து செய்து விட்டதாக கவுதமி நாயர் தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவதுகடந்த 2012 முதல் ஸ்ரீநாத் ராஜேந்திரனை எனக்குத் தெரியும். பல வருடங்களாக 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தோம். அதன்படி கடந்த 2017ல் 2 பேரும் திருமணம் செய்து கொண்டோம். முதல் 3 வருடங்கள் எங்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. ஆனால், அதன் பிறகு எங்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. அதையெல்லாம் மறந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பல முயற்சிகளை எடுத்தோம். ஆனால், எதுவுமே பலிக்கவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் 2 பேரும் பிரிய தீர்மானித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.