திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுமாப்பிள்ளை பரிதாப பலி :
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கம்மவார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் பிரேம்குமார் (29). இவர் டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் இருக்கும் காலி பாட்டில்களை குத்தகைக்கு எடுத்து மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் அதே கம்மவார் பாளையம் கிராமத்தைச்சேர்ந்த அஜித்குமார் (24) என்பவரது இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற நண்பருடன் திருவள்ளூருக்கு வருகை தந்துள்ளார்.பின்னர் மீண்டும் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் மீது செல்லும் போது நிலை தடுமாறி மேம்பாலத்தில் நடுவில் இருந்த விளக்கு கோபுரத்தில் மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்த பிரேம்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பிரேம்குமாருடன் வந்த விஜயகுமார் படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் இருந்ததால், பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த பிரேம்குமாருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணமானதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் கம்மவார்பாளையம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.