உடையவர் திருவடி அறக்கட்டளையினர் சீரமைத்து மாணவர்களுக்கு வழங்கினர்.
அரசு தொடக்கப்பள்ளி பழுதடைந்து சீரமைக்காமல் இருந்த நிலையில் உடையவர் திருவடி அறக்கட்டளையினர் சீரமைத்து மாணவர்களுக்கு வழங்கினர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையத்தானூர் பகுதியில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு இருபது வருடங்களுக்கு முன்பாக புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. அப்பொழுது வகுப்பறைக் கட்டடங்கள் தரமில்லாமல் கட்டப்பட்டதால் பழுதடைந்தது. அதனை அடுத்து 2009ஆம் ஆண்டு சீரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு சீரமைக்கப்பட்டன. அப்போதும் மெத்தனமான சீரமைப்பு பணிகளும் சரிவர மேற்கொள்ள படாததால் பள்ளி மேற்கூரைகள் அவ்வப்போது போது உடைந்து விழுந்து வந்தன. மேலும் மேற்கூரைகள் விரிசல் அடைந்துள்ளதால் மழைக்காலங்களில் பள்ளி வகுப்பறையிலேயே மழைநீர் ஒழுகி வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது பக்கெட்கள் பாத்திரங்களை வைத்து மழைநீர் ஒழுகும் இடங்களில் வைத்து வகுப்பறையில் மழை நீர் தேங்காதவாறு ஆசிரியர்களும் மாணவர்களும் தடுத்து வந்துள்ளனர். வகுப்பறை கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஏற்கனவே துறை சார்ந்த அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இதுகுறித்து அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பெற்றோர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் அப்பள்ளியின் சுற்றுச் சுவரும் மிகவும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் உடைந்து விழுந்து விட்டன. இது குறித்து நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளி வந்தன. இதனை கவனித்த உடையவர் திருவடி அறக்கட்டளையினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் தற்போதைய காலகட்டத்தில் மாணவர் கல்வியே முக்கியம் என்ற நோக்கில் பள்ளியை சீரமைக்க முன்வந்து 3,54,000 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள் மற்றும் மாணவர்களுக்கான கழிவறைகள் உள்ளிட்டவற்றை சீரமைத்து மாணவர்களுக்காக இன்று வழங்கினர்.