ஜாக்டோ ஜியோ போராட்ட ஆயுத்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கட்டமைப்பு பங்கேற்காது
வருகின்ற 19-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருக்கின்ற போராட்ட விளக்க ஆயுத்த மாநாட்டில் கலந்துக் கொள்ள போவதில்லை. காரணம் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஊழியர்களை கண்டுக்கொள்ளாத நிலையில் போராட்டங்களை சிதைக்கின்ற விதமாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை பந்தாடியது. பலர் மீது வழக்குத் தொடர்ந்து சிறையில் அடைத்து துறைரீதியான நடவடிக்கை எடுத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணியிடை நீக்கம் செய்து கொடுமைப்படுத்தியது.
பணியிட மாற்றம் செய்து சிதறடிக்கவும் செய்தது. மேலும் அப்போதைய எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு போராட்டக் களத்திற்கும் நேரடியாக வருகை தந்து ஆதரவு அளித்து நான் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். தங்களை வருத்திக் கொண்டு போராட வேண்டாம் என தெரிவித்ததை எப்படி மறக்க முடியும். மறுக்கத் தோன்றும். 2021 தேர்தல் திமுக தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கை இடம்பெற செய்தது . ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு வரிக்கூட இடம்பெறவில்லை. 10 ஆண்டுகள் அரசு ஊழியர்களை எதிரியாக நினைத்து அரசு ஊழியர்களை சந்திக்க மறுத்ததை நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு போராட்டக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து அனைத்து வழக்குகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் திரும்ப பெற்றார். ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட்டு வேலைநிறுத்த காலத்தையும் பணிநாளாக அறிவித்து பண பலன்களை வழங்கினார். பணியிட மாற்றம் செய்தவர்களுக்கு மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கினார். அதேபோன்று பள்ளிக்கல்வித்துறையில் அனைத்துவகை ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஒளிவு மறைவு அற்ற பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினார். அதே நிலையில் தான் மருத்துவத்துறை உள்ளிட்டனைத்து துறைகளிலும் ஒளிவு மறைவு அற்ற மாறுதல் கலந்தாய்வை நடத்தி நலன் காத்தார்.நமது எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை கண்டிப்பாக கொண்டு வருவார். ஏனென்றால் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என தொடர்ந்து தெரிவித்து வருகிறார் . அதே போல் நமது அனைத்து கோரிக்கைகளையும் கண்டிப்பாக நிறவேற்றுவார் என்ற நம்பிக்கை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பிற்கு உள்ளது. ஆதலால் ஜாக்டோ ஜியோ நடத்தும் போராட்ட ஆயுத்த மாநாட்டில் கலந்துக் கொள்ளாது என அதன் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.