தெலுங்கில் அதிகமாக நடிப்பது ஏன்?-தீப்ஷிகா
ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான பான் இந்தியா படம், ‘மைக்கேல்’. இதில், கவுதம் வாசுதேவ் மேனனின் 2-வது மனைவியாக, சிறுவயது சந்தீப் கிஷனின் தாயாக நடித்தவர் தீப்ஷிகா. சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த அவர், தற்போது தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘மைக்கேல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நான் நடித்த நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டன. பிறகு படத்தின் நீளம் கருதி அனைத்தும் குறைக்கப்பட்டன. விஜய்சேதுபதி, அவ்வப்போது எனக்கு நடிப்பு பற்றி சொல்லிக் கொடுத்தார். தற்போது ‘உத்வேகம்’ என்ற தெலுங்கு படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறேன். ஹீரோவாக அருண் ஆதித்யா நடிக்கிறார். அடுத்து ‘ராவண கல்யாணம்’ படத்தில் நடிக்கிறேன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இதில் சந்தீப் மாதவ் ஹீரோவாக நடித்துள்ளார். ரவிதேஜா தயாரிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறேன். ‘மைக்கேல்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது நான் நடிக்கும் பல படங்கள் பான் இந்தியா படங்களாக உருவாகின்றன. அதை நினைத்து இன்னும் அதிக உற்சாகத்துடன் பணியாற்றுகிறேன். சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு மற்ற மொழி அதிகமாக கைகொடுத்தாலும், தமிழ்ப் படங்களில் அதிகமாக நடித்து சாதிக்க காத்திருக்கிறேன்.