ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனித நேய வார நிறைவு விழா :
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடைபெற்ற மனித நேய வார நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கி பேசினார்.இன்றைக்கு மனித நேய வார விழாவை நடத்தி முடிக்கும் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆண்கள் நலத்துறையைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வருகை புரிந்துள்ளீர்கள். அந்த மாணவர்களுடைய பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மாணவர்களுடைய அந்த கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு காத்திருக்கிறோம். மனித நேய வாரம் என்பது தீண்டாமையை ஒழிப்பதற்கு ஒவ்வோராண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஜனவரி 24 முதல் 30 தேதி வரை இவ்விழா நடத்தி முடிக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த மனித நேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மனித நேயம் என்பது சகமனிதர்களிடத்தில் நாம் காட்டுவது மட்டுமல்ல, பிற உயிர்களிடத்தும் நாம் மனித நேயத்தை கடைபிடித்து இரக்க குணத்துடன் செயல்பட வேண்டும் பிறரது துன்பத்தை, நமது துன்பமாக கருதி பிறருக்கு உதவுதல், கோபம், பொறாமை, வெறுப்பு, குற்றம் காணுதல் போன்ற தீய குணங்களை தவிர்த்து சக மனிதர்களிடம் அன்பாக இருக்க பழகுவதே மனித நேயமாகும். மனித நேயம் மற்றும் தீண்டாமை ஒழிப்பினை பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களிடையே ஏற்படுத்த பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து, இவ்விழாவில் பெண்கள் சுய தொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4,700 வீதம் ரூ.47,000 மதிப்பீட்டிலான தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இலவசமாக வழங்கியும், தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற கலை மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் புத்தகங்களையும் பரிசாக வழங்கினார். மேலும், இவ்விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ப.செல்வராணி, சமூக ஆர்வலர் ஜெய தென்னரசு, செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சிராணி அன்பு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.