கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா :
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு பேசினார்.இப்பள்ளியின் மாணவியர்கள் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அவ்வரங்குகளில் மாணவியர்கள் தனித்தனி துறைகள் குறித்து பிரத்யேகமாக் தயார்செய்து கண்காட்சி அரங்கம் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக அறிவியல் பரிசோதனைகள் மிகவும் அருமையாக இருந்தது. மேலும், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எளிதில் தெளிவுப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்ட மாதிரி தேர்தல் வாக்குச்சாவடி மைய அரங்கம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் ஏன் அதிகம் நடைபெறுகிறது என்று அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வுசெய்துள்ளோம். ஒரு குழந்தை திருமணத்தை நடத்தும் பெற்றோர்கள், திருமணம் செய்து கொள்ளும் மணமகன், அந்த கல்யாணத்திற்கு யாராவது வந்து தகவல் தெரிவிக்காமல் பங்கேற்று கொள்ளும் நபர்கள் கூட குற்றவியல் நடவடிக்கைக்கு சிறைக்கு அனுப்பலாம் என்று சட்டத்தில் உள்ளது. அந்த அளவுக்கு மிக மிக கடுமையான சட்டம் இது. உங்கள் சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய 18 வயதிற்குட்பட்ட எந்த குழந்தைக்காவது, உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது இந்த குழந்தை திருமணம் செய்வது குறித்த தகவல் கிடைத்தால் 1098 அல்லது 181 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.முன்னதாக மாணவியர்களின் சாதனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டு, மாணவியர்களோடு கலந்துரையாடினார். தொடர்ந்து, இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவ – மாணவியர்கள், குழந்தை திருமணம் தடுத்தல் குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்றுக்கொண்டனர். மேலும், இஙவ்விழாவில் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவியர்களிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேடயங்களை வழங்கி, பாராட்டினார்.மேலும், இவ்விழாவில் குழந்தை திருமணத்திலிருந்து மீண்டு தற்பொழுது உயர்கல்வி பயின்று வரும் இரண்டு கல்லூரி மாணவியர்களுக்கு குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ள “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்ப்பிப்போம்” திட்டத்தின் தூதுவர் ஆக நியமனம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களையும், தலா ரூ.5000-த்திற்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இவ்விழாவில், சார் ஆட்சியர் (பொன்னேரி) ஐஸ்வர்யா ராமநாதன்,மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) ச.க.லலிதா, கும்மிடிப்பூண்டி பேரூராட்சித் தலைவர் சகிலா அறிவழகன், பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ந.பூபால முருகன், குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி.அக்சிலியா, சமூக பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் சையத் ரவூப், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ) எஸ்.சங்கீதா, பாதுகாப்பு அலுவலர் திருமதி.மலர்விழி, பள்ளி துணை ஆய்வாளர் (பொன்னேரி) பிரேம்குமார், தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.