திருவள்ளூர் டிச 11 : திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு ஆட்டோ, கார் ,வேன், லாரி போன்ற வாகனங்களில் ரேசன் அரிசி கடத்தி வருவது தொடர் கதையாக இருப்பதால் தமிழக அரசின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்பி., கீதா மேற்பார்வையில் , டிஎஸ்பி நாகாரஜான் வழிகாட்டுதலின் படி சிறப்பு சுற்றுக் காவல் படை சப் இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் மற்றும் போலீசார் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிஎன்-22 சியு 0371 என்ற மகேந்திரா வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் தமிழக அரசு சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேசன் அரிசியை சட்டவிரோதமாக ஆந்தராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் கடத்தலில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவிற்கு உட்பட்ட அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பாலு என்பவரது மகன் மணிகண்டன் (38) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மகேந்திரா வேனையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றரை டன் ரேசன் அரிசியை திருவள்ளூரில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர்.