25 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளை வழக்கில் 52 வயது பெண் கைது :
திருவள்ளூர் டிச 04 : திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. விவசாயியான இவரது மகனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. அப்போது திருமண மண்டபத்தில் நுழைந்த பெண் ஒருவர் உறவுக்காரர் என்று கூறி மணமகள் அறைக்கு சென்ற பெண் ஒருவர் மணமகளின் 15 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிய அந்த பெண் அங்கிருந்து நைசாக நழுவி சென்று விட்டார். சற்று நேரத்தில் மணமகள் நகையை அணிய வேண்டும் என்று தேடிய போது பையில் வைத்திருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
இதே போல் போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் திருமணம் மணவாளநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. அந்த திருமண மண்டபத்திலும் மணமகளின் அறைக்கு சென்ற பெண் ஒருவர் உறவுக்காரர் என்று சொல்லி அவர்கள் அசந்த நேரத்தில் 10 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் தனிப்படை போலீசார் திருமண மண்டபங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இரு வேறு திருமண மண்டபங்களிலும் ஒரே பெண் தான் நூதன முறையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் முடிவு செய்தனர்.
இதனையடுத்து கடந்த வாரம் சென்னை தி.நகரில் பிரபல துணிக்கடையில் திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்று வெளியே வந்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் மனைவி சாந்தி (எ) தில் சாந்தி (52) என்பவர் திருமண மண்டபங்களில் கைவரிசை காட்டியது தெரிந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
திருமண மண்டபத்தில் கொள்ளையடித்த நகைகளை ஆவடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சத்திற்கு அடகு வைத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து சாந்தியை போலீசார் திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மற்றும் மணவாளநகர் ஆகிய இரு வேறு திருமண மண்டபங்களில் உறவுக்கார பெண் போல் நடித்து 25 பவுன் நகையை திருடி சென்ற 52 வயது பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.