சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு போராட்டம் :
திருவள்ளூர் நவ 28 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்துதல் உள்பட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் ஏ.சிவா தலைமை தாங்கினார்.
மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் என்.மாலா, சி.மலர்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அந்த சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.ஆர்.சுலோச்சனா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.
அப்போது, சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறை படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,பணி ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆகவும் உயர்த்த வேண்டும்.வரையறை செய்த ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.7650 வழங்குதல் உள்பட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகி ஏ.சந்திரசேகரன் நிறைவுரை வழங்கினார். இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் மாவட்ட பொருளாளர் குணசுந்தரி நன்றி கூறினார்.