திருவள்ளூரில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்
திருவள்ளூர் நவ 04 :
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி விவசாயிகளோடு கலந்துரையாடி, கோரிக்கைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பேசினார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள் அனைவருக்கும் அனைத்து கடன் உதவிகளும் கிடைக்கும் வகையில் வங்கிகளின் மூலம்; லோன் மேளா நடத்த திட்டமிட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இவ்வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .
கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல மாதங்களாக நிலுவையில் இருந்த நிர்வாக குழு கூட்டம் மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற்சியால் மிக சிறப்பாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்தும் நடப்பாண்டிற்கான கரும்பு அரவையை விரைவில் துவக்குவதற்கும் முடிவான வாகன வாடகையை நிர்ணயித்து வழங்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் இரண்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தொழில் துவங்க வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் துவக்க நிதியாக ரூ.10 இலட்சமும், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறுகீரை விதைகள் மற்றும் இடுபொருட்கள் தொகுப்பு ரூ.10 ஆயிரம் வீதம் 2 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.