ரூ.451 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொது மக்கள் பயன்பாட்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பார்வையிட்டார்

Loading

திருவள்ளூர் அக் 23 :

திருவள்ளுர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ரூ.451 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவப் பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு, பிரேத பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மருத்துவ சேவைகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்  கே.ஜெயக்குமார், எம்எல்ஏ க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், கா.கணபதி, துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அரசி ஸ்ரீவத்ஷன் அனைவரையும் வரவேற்றார்.மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது,

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கல்லூரி வளாகம் 21.48 ஏக்கர் பரப்பளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பெருந்திட்ட வளாகத்தில் மிக பிரம்மாண்டமான கட்டிடங்கள் முடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 12 ம் தேதி பாரத பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திறந்து வைத்தார். இதில் தற்பொழுது தேசிய மருத்துவ ஆணையம் இக்கல்லூரிக்கு 2021 – 2022 ம் ஆண்டிற்கு இளநிலை மருத்துவ படிப்பிற்கு 100 மாணவர்கள் அனுமதி வழங்கி அதனை ஒட்டி 100 மருத்துவ மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இதில் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீ;ட்டில் 7 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மேலும், நடப்பாண்டில் 2022 – 2023 ம் ஆண்டிற்கு 100 மாணவர்களுக்கான சேர்க்கைக்கும் அங்கீகாரம் தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. இக்கல்லூரி மருத்துவமனை வளாகம் திருவள்ளுர் மாவட்டத்தில் பெரியகுப்பம் கிராமத்தில் 8.48 ஏக்கர் பரப்பளவில் புதிதாக 6 அடுக்கு கொண்ட மருத்துவமனை கட்டிடம் சுமார் 3 இலட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கூடுதலாக 500 படுக்கை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதில் பொது மருத்துவ பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மயக்கவியல் துறை, பல் நலவியல் துறை, எலும்பியல் மற்றும் முடநீக்கியல் துறை, கண்மருத்துவத் துறை, காது மூக்கு தொண்டை மருத்துவத்துறை, தோல் மருத்துவத்துறை, நெஞ்சக மற்றும் காச நோய் மருத்துவத்துறை, இரத்த வங்கி, தீக் காயங்கள் சிகிச்சை அளிக்கும் பிரிவு, மனநல மருத்துவத்துறை, மேம்படுத்தப்பட்ட மத்திய ஆய்வகம், கதிரியக்கவியல் துறை, இயன்முறை சிகிச்சை பிரிவு, திரவ நச்சு நீக்கியல் பிரிவு மற்றும் 10 அறுவை சிகிச்சை அரங்கமும், 98 படுக்கை வசதியுடன், 6 திவிர, அதிதீவிர, உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவும் உள்ளது. இதில் அனைத்து விதமான உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் இயந்திரங்கள் உள்ளன.மகப்பேறு மற்றும் தாய்சேய் நல சிகிச்சை பிரிவுக்கென 200 படுக்கை வசதிகள் கொண்ட  எம்சிஎச் வார்டு தற்பொழுது செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 பிரசவங்கள் சிறப்பான முறையில் கவனிக்கப்பட்டு வருகிறது.

இம்மருத்துவமனையில் மத்திய பதிவேடுகள் பராமரிப்பு பிரிவு, நவீன மயமாக்கப்பட்ட சலைவயகம், நவீன கிருமி நீக்கி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இவ்வளாகத்தில் 84 உள்ளிருப்பு மருத்துவர்கள் தங்கும் குடியிருப்பும், 114 பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதிகளும், 68 செவிலியர்கள் தங்கும் விடுதிகளும் உள்ளன. இம்மருத்துவமனையில் பணியாற்றிட மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பம், அடிப்படை பணியாளர்களின் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதில் 1,238 பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும், 46 தொகுப்பூதிய பணியாளர்களாகவும், 47 புற ஆதாரமுறை பணியாளர்கள் என மொத்தம் 1,331 பணியாளர்கள் உள்ளனர்.

திருவள்ளுர் மருத்துவ கட்டமைப்புகளான துணை சுகாதார நிலையம் – 343, ஆரம்ப சுகாதார நிலையம் – 68, வட்டம் சாரா மருத்துவமனை – 2, வட்டார மருத்துவமனை – 9, மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை – 1 உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் 17 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 25 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 50 ஆரம்ப சுகாதார நிலையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், திருவள்ளுர் மாவட்டத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கோடுவெளி துணை சுகாதார நிலைய கட்டிடம் திறக்க தயாராக உள்ளது. மேலும், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் பெரியபாளையம், மீஞ்சூர் மற்றும் பீரகுப்பம் ஆகிய பகுதிகளில் வட்டார பொது சுகாதார ஆய்வகங்கள் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், தலா ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கொள்ளானூர், தேர்வழி மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய சுகாதார நிலையத்திற்கான துணை சுகாதார நிலையங்களுக்கான கட்டுமானப் பணிகளும், நல வாழ்வு மையங்கள் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் மாதரவேடு பகுதியில் நலவாழ்வு மையங்கள் என மொத்தம் ரூ.1.65 கோடி செலவில் 7 புதிய கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்து விரைவில் திறந்து வைக்கப்படும். இவ்வாறு மக்கள் நல்லாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவம் மக்கள் நலத்துறை சார்பாக ரூ.451 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவப் பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு, பிரேத பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் மருத்துவ சேவைகளை துவக்கி வைக்கும் விதமாக உள் நோயாளிகளுக்கான அனுமதி அட்டைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் வளத்துறை அமைச்சர் முன்னிலையில் பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேலும், இம்மருத்துவ சேவைகள் துவக்க விழாவில், இம்மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சமூக பங்களிப்பு நிதியின் கீழ் சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனங்களை அமைச்சர்கள் பாராட்டி, கேடயங்களை வழங்கி, இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பாக சேவை புரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கேடயங்களை வழங்கி, பாராட்டினர்.இறுதியாக  தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக சமூக பங்களிப்பு நிதி ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அவசர ஊர்தியை அமைச்சர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *