தனியார் தொழிற்சாலை கட்டுவதற்கு இடம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் படித்த இளைஞர்களுக்கு மீண்டும் வேலை வழங்க பாமக கோரிக்கை : திருவள்ளூர் எஸ்பி.யிடம் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மனு

Loading

திருவள்ளூர் அக் 22 :
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு  தொழிற்சாலை நிர்வாகம் வேலை வழங்கியிருந்தது. இந்நிலையில் முதலில் இருந்த நிர்வாகம் கைமாறி பி.சி.ஏ நிர்வாகத்திற்கு சென்றது. தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்ததால்  தொழிற்சாலையில் 22 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 150 ஒப்பந்த தொழிலாளர்கள் என 172 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்களை புதியதாக வந்த தொழிற்சாலை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது.இதனை தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட நிலம் கொடுத்து பணியாற்றி வந்த 172 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 4 வருட காலமாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சாலை மறியல் போராட்டம், கம்பெனிக்கு பூட்டு போடும் போராட்டம், கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் தொழிற்சாலை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் பலமுறை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும்  தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்து பணியாற்றி வந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 172 தொழிலாளர்களுக்கும் இதுநாள் வரை பணி வழங்க வில்லை. இந்நிலையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி திருவள்ளூர் எஸ்.பி. பா.சிபாஸ் கல்யாணை நேரில் சந்தித்து தொழிற்சாலை கட்டுவதற்கு நிலம் வழங்கிய குடும்பத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
வேலை வாய்ப்பு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய இணை அமைச்சர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொழிற்சாலைகள் கட்டுவதற்கு நிலம் வழங்கிய விவசாயிகளின் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அந்தந்த தொழிற்சாலை நிர்வாகத்திடம் வலியுறுத்த உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரிடமும் இது குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க பாமக சார்பில் வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் நெய்வேலியில் வேலைக்காக நடத்திய போராட்டத்தைப் போன்று பாமக சார்பில் மேல்நல்லாத்தூர் தொழிற்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரி மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார். இதில் பாமக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த கஜேந்திரன், மேற்கு மாவட்ட பாமக செயலாளரும், மேற்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான இ.தினேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் நா.வெங்கடேசன், யோகானந்தம், பா.யோகநாதன், கேசவன்,  சரவணன், அன்பு உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *