பள்ளிப்பட்டு அருகே தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவால் ரசாயணம் கலந்த நீராக மாறியதால் விவசாயம் பாதிப்பு
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திரா எல்லைப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை உள்ளது. ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்திலிருந்தும், தமிழகத்தில் சில விவசாயிகளும் கரும்பை ஆந்தி தனியார் ஆலைக்கு அனுப்பி வருகின்றனர். இந் நிலையில், கரும்பு அரவைலிருந்து வரும் மொலாசிஸ் அதன் அருகில் உள்ள மதுபான ஆலைக்கு சென்று மதுபானம் உற்பத்தி செய்து அதன் கழிவுகள் மூலம் எரிபொருள் உற்பத்தி செய்து கடைசியில் ரசாயனம் நிறைந்த கழிவு நீர் அருகில் உள்ள வெளியகரம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் கலந்து விடுகின்றனது.
இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளாக ரசாயன கழிவுநீர் ஏரியில் கலப்பதால், ஏரி பாசன நீர் ரசாயனமடைந்து எண்ணைய் திட்டு போல் மாறியுள்ளது. அந்த நீரை விவசாயத்திற்கு பயன்ப்படுத்துவதால், பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் வெகுவாக குறைந்து வருவதால் ஏரி நீர் பாசனத்தை நம்பி பயிர் சாகுபடி செய்த வெளியகரம், சங்கீதகுப்பம், சானாகுப்பம், வெங்கட்ராஜ்குப்பம் ஆகிய கிரமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிர் சாகுபடியை நிறுத்தி விட்டனர்.
ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் பாய்ச்சி சில விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் சாகுபடி முற்றிலும் நின்று வறண்ட பூமியாக மாறி வருகின்றது. மேலும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகின்றது. மாசு கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள், சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வேறு வழியின்றி பயிர் சாகுபடியை நம்பிய விவசாயிகள் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து ஏரி நீர் மாசடைந்து ரசாயனம் கலப்பதை தடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.