திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

Loading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 62 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 29 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 47 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 52 மனுக்களும் என மொத்தம் 223 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் உத்தரவின்படி, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணியில் 100 சதவிகிதம் பூர்த்தி செய்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி மற்றும் பூவிருந்தவல்லி ஆகிய சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் பணியை பாராட்டி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் அவ்வலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்தபோது பணியிடையில் காலமான பணியாளர்களின் 3 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 2 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் மற்றும் ஒரு சமையலர் பணியிடம் என 3 பணியிடங்களுக்கான ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் புரிவதற்காக 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய தொகையாக தலா ரூ.50,000 வீதம் ஒரு இலட்சத்திற்கான ஆணைகளை வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சி.வித்யா (பொது), ஆர்.ஸ்ரீதர்(சத்துணவு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.ப.மதுசூதணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சு.உதயம் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *