கணவன் மனைவி தகராறு3 குழந்தைகளின் தாய் சாவில் மர்மம்போலீசில் அண்ணன் புகார்
அரியாங்குப்பம்
கணவன், மனைவி தகராறில் 3 குழந்தை களின் தாய் உயிரிழந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அண்ணன் புகார் தெரிவித்துள்ளார்.
குடும்ப தகராறு
புதுச்சேரி தவளக்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36). இவரது மனைவி சந்தியா (வயது 26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
இந்தநிலையில் கொத்தனார் வேலைக்கு சென்று வந்த வெங்கடேசன் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மதுபோதையில் தாக்குதல்
சம்பவத்தன்று இரவு மது குடித்துவிட்டு வந்து சந்தியாவை வெங்கடேசன் தாக்கியுள்ளார். இதுபற்றி, சந்தியாவின் அண்ணன் சதீசிடம் வெங்கடேசன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது அவர், உன் தங்கைக்கு பேய் பிடித்து விட்டது. இதனால் பலமாக தாக்கி விட்டேன். இதில் காயமடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ், உடனடியாக பண்ருட்டி அருகே அக்கடவள்ளி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு விரைந்து வந்தார். அப்போது தனது தங்கை சந்தியா இறந்ததை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் சந்தியா இறந்து போனதை அறிந்து தனது தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாக தவளக்குப்பம் போலீசில் சதீஷ் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து சந்தியா சாவிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார். 3 குழந்தைகளின் தாய் திடீரென இறந்துபோன சம்பவம் தவளக்குப்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.