பூமி இயற்கை பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு பேரணி … மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடி அசைத்து துவங்கி வைத்தார்
கன்னியகுமாரி மாவட்டம் :-
மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் மாசுபடுத்தாமல் காக்கவும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சுற்றுச்சூழல் மன்றமும் வன அலுவலகமும் இணைந்து
“நமது கிரகத்தில் முதலீடு செய்யுங்கள்” எனும் கருத்தை மையமாக கொண்டு
இயற்கையின் சமநிலையை பேண துணிச்சலுடன் விரிசிந்தனையுடன் கூடிய புதுமையான வழிகளை உருவாக்கி செயல்முறை படுத்த வேண்டும் என்பதனை விளக்கும்விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உடலினை உறுதி செய்ய உடற்பயிற்சி இன்றியமையாததைப்போன்று உலகினை வளப்படுத்த நம் அனைவரின் செயல்பாடுகளும் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக காலை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து மாணவர்களின் பசுமை ஓட்டம் நடைபெற்றது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரண் பிரசாத்IPS கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதைத்தொடர்ந்து நைடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் துவக்கமாக புவி தின லோகோவை டாக்டர் ரேணு தேவபிரசாத் அறிமுகம் செய்து வைத்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செ. மலர் விழி அவர்கள் வரவேற்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் அ. புகழேந்தி தலைமை தாங்கி நாம் அனைவரும் நம் பூமி கிரகத்தை வளமுடையதாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மாவட்ட வன அலுவலர் ம இளையராஜா (இ.வ.ப) மாணவர்களுடன் இணைந்து நம்ம குமரியின் வளங்கள் என்ற உரையாடலில் குமரி மாவட்டத்தில் உள்ள முத்துக்குளி வயல், மணக்குடி மாங்குரோவ் காடுகள், நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தொல்காப்பியர் மரம், கடல், மலை, காட்டு வளங்ளின் சிறப்புகளை மாணவர்களுக்கு விளக்கினர்.
வாழ்த்துரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் IPS தன்னுடைய வாழ்த்துரையில், குமரி மாவட்டம் இயற்கை சூழ்ந்த அழகிய மாவட்டம். நம்முடைய வாழ்க்கைமுறை மாறிவிட்டது. இயற்கையை விட்டு மனிதன் விலகிச் செல்லத் துவங்கி விட்டான். நாம் பயன்படுத்தும் வாகனம் மூலம் காற்று மாசு படுகின்றது. மரங்களை அழிப்பதால் பசுமையை இழக்கின்றோம். இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மாணவ மாணவிகள் அதிகமாக பங்குபெற வேண்டும். இளைய தலைமுறை நினைத்தால் பாதுகாப்பான, தூய்மையான உலகை உருவாக்க முடியும். குமரியின் இயற்கை அளிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். காடுகளையும் மலைகளையும் அழிவிலிருந்து மீட்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய டாக்டர். அபிஷா அவ்வை ஸ்ரீ அழகேசன் அவர்கள் எளிய கதை மூலம் மாணவர்களுக்கு வாழத்தகுந்த இடம் பூமி என்பதனை வலியுறுத்தினார்கள். மாணவர்களும் உலகை வளப்படுத்தும் செயல்களையும் சிதைக்கும் செயல்களையும் பற்றிய ஒரு செயல்விளக்கம் அளித்தனர். பங்கேற்ற மாணவர்கள் உலகினை வளமாக்குவோம் அதன் வடிவம் மாறாமல் மீட்டெடுப்போம் என்ற உறுதிமொழியை ஏற்றனர் அவர்களுக்கு விதைப்பந்துகளை நாகர்கோவில் குமரி FM 101ன் ஒலிபரப்பு பொறுப்பாளர் செல்வி S நவரத்தினா வழங்கி விதைகளை விருட்சமாக்குங்கள் என வாழ்த்தினார்கள். நிறைவாக முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எஸ் ஹேமா (உயர்நிலை) நன்றியுரை வழங்கினார். மாவட்ட முதல்மை கல்வி அலுவலர் அ. புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) சுரேஷ்பாபு, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.