வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்காக பாமகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்

Loading

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்காக பாமகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக 7 காரணங்களை அடுக்கியது. அவை நியாயமற்ற காரணங்கள் என்பதை அப்போதே உரிய ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன். அதன்பின் 5 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான 6 தடைகளை தகர்த்து இருக்கிறோம்.

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பது ஒரே ஒரு முட்டுக்கட்டை தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை என்பது தான் அதுவாகும். ஐந்து மாதங்களில் 6 தடைகள் தகர்த்தெறிந்த நமக்கு, மீதமுள்ள ஒற்றை முட்டுக்கட்டையை அரசியல் போராட்டத்தின் மூலம் கடக்கத் தெரியாதா? அது என்ன நமக்கு புதிதா?
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை கடந்த 43 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறோம். கடந்த 2020&ஆம் ஆண்டு திசம்பர் ஒன்றாம் தேதி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி  சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை நோக்கி அணிவகுப்பதற்கான இரண்டாம் அலை போராட்டங்களை மருத்துவர் அன்புமணி  தலைமையில் நாம் தொடங்கிய போது, இந்த முறை நிச்சயமாக இட ஒதுக்கீட்டை வென்றெடுப்போம் என்ற நம்பிக்கை உங்களில் எத்தனை பேருக்கு இருந்தது? என்பது எனக்குத் தெரியாது. ஆனால், வன்னியர் இட ஒதுக்கீட்டை  வென்றெடுக்காமல் ஓயப்போவதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதைப் போலவே  80 நாட்களுக்குள் வன்னியர்கள் உள் ஒதுக்கீட்டை நாம் வெற்றிகரமாக வென்றெடுத்தது மிகப்பெரிய வரலாறு.

அதேபோல், இப்போதும் நாம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நிச்சயமாக வென்றெடுப்போம். அதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காகத் தான்  சென்னையில் இன்று  பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவின்படி சமூகநீதிக்கான நமது அடுத்தக்கட்ட போராட்டம் தொடங்கும்; அது வெற்றியில் முடியும்.

அதற்கும் முன்பாக இன்னொரு உண்மையையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். வன்னியர்கள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், நம்முடன் இணைந்து தமிழக அரசும், மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி வாதிட்டது. இப்போதும் கூட சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைக் கடந்து தேசிய அளவில் சமூகநீதியை பாதுகாப்பதற்கான கூட்டமைப்பு ஒன்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியிருக்கிறார். இரு வாரங்களுக்கு முன்பு தான் அவரது முயற்சிக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தேசிய அளவில் சமூகநீதியை பாதுகாக்க வேண்டும்  என்று நினைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அவரது ஆட்சியின் கீழ் இருக்கும் தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும், அக்கறையும் இருக்காதா? அதனால், போராட்டம் நடத்தாமலேயே வன்னியர் இட ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. நமது இலக்கு வன்னியர் இட ஒதுக்கீடு தான். அதை அடைய எவ்வகையான பாதையிலும் பயணிக்க தயாராகவே இருப்போம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *