ஆத்தூரில் பாரத் சம உடமை கட்சியின் முப்பெரும் விழா; நிறுவனர் பழனி ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாரத் சம உடமை கட்சியின் முப்பெரும் விழா மற்றும் அக்கட்சியின் நிறுவனரும் பொதுச் செயலாளருமான, பாரத் கலா ரத்னா டாக்டர்.A.P.S. பழனி ராமச்சந்திரன் அவர்களின் 58வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. பாரத் சம உடமை கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அக்கட்சியின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு கை இழுவண்டி, ஏழை எளிய பெண்களுக்கும், கைம்பெண்களுக்கும் தையல் இயந்திரங்கள், காதுகள் கேளாதவர்களுக்கு ஒலி திறன் இயந்திரம், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவை இயந்திரம், சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கான அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய், மிளகாய்,புளி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார்.
மேலும் முப்பெரும் விழாவில் பாரத் சம உடமை கட்சியின் நிறுவனரும் பொதுச் செயலாளருமான பழனி ராமச்சந்திரன் அவர்கள் பேசியதாவது; பாரத் சம உடமை கட்சி, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நன்னாளில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். இக்கட்சியானது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் நாட்டில் உள்ள அனைவரும் அனைத்து விதத்திலும் சமநிலை பெற வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்சியாகும். இக்கட்சியில் பல்வேறு நபர்கள் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இணைந்து வருகின்றனர். இதர மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்து வருகின்றோம். மேலும் இக்கட்சியின் சார்பில் பல்வேறு நபர்களுக்கு தொழில் தொடங்குவதற்கும் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்கும் பேருதவி செய்து வருகிறது. அதே போல் அடுத்த ஆண்டிலிருந்து வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவியும் வழங்கப்பட உள்ளது. வருங்காலத்தில் பாரத் சமவுடமை கட்சி சமூக நீதிக்காகவும், பொது மக்களின் வறுமையை ஒழிப்பதற்காகவும் தொடர்ந்து அயராது பாடுபடும் என்றார். இவ்விழாவில் அக்கட்சியின் மாநில தலைவர் ஆறுமுகம், மாநில பொருளாளர் ரவிசங்கர், மாநில இளைஞரணி செயலாளர் மதியழகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான் எட்வர்ட், மாவட்ட செயலாளர் ஜெகதீசன், மாநில மகளிர் அணி செயலாளர் பிரபா, நகர மகளிர் அணி செயலாளர் கவிதா, மாநில தொண்டர் படையின் தலைவர் IT.சேகர், மாநில செய்தி தொடர்பாளர் செல்லமுத்து, மாநில கலை மற்றும் திரைப்படத் துறையின் தினேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.