கூத்தாண்டவர் கோவில் திருவிழா : மிஸ் கூவாகம் போட்டியை உளுந்தூர்பேட்டையில் நடத்த கோரிக்கை
உளுந்தூர்பேட்டை மார்ச்.18-
உலகப் புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் மிஸ் கூவாகம் போட்டியை இந்த ஆண்டு முதல் உளுந்தூர்பேட்டையில் நடத்த வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சிமாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலகப் புகழ் பெற்ற அருள்மிகு கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைபௌர்ணமியன்று திருநங்கைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாட விழா குழு முடிவு செய்துள்ளது.
மேலும் சென்னை,கொல்கத்தா,மும்பை, டெல்லி,கேரளா,பெங்களூர்,உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் விழாவில் திருநங்கைகள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவிழாவின் போது முதல் நாள் நடக்கும் மிஸ் கூவாகம் போட்டி ஆண்டாண்டு காலமாக விழுப்புரத்தில் நடைபெற்று வந்தது. தற்போது விழுப்புரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கூவாகம் கிராமம் அமைந்துள்ளதால் இந்த ஆண்டு முதல் தொடர்ந்து மிஸ் கூவாகம் போட்டியை உளுந்தூர்பேட்டையில் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வருகின்ற ஏப்ரல் மாதம் 5ம் தேதி கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கொண்டாட காப்பு கட்டுதல் மற்றும் சாகை வார்த்தல் நிகழ்ச்சி தொடங்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அரவான் கண் திறத்தல், திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 19ம் தேதியும் தேரோட்டம் மறுநாள் 20ம் தேதியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்களும் கலந்துகொள்கின்றனர். முன்னதாக 17 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் மிஸ் கூவாகம் போட்டி நடப்பது வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் விழுப்புரத்தில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சி இந்த ஆண்டு முதல் உளுந்தூர்பேட்டையில் நடத்தவேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் திருநங்கைகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.