2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் மளிகைப் பொருட்கள் கொள்ளை
போலீசார் மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
திருவள்ளூர் மார்ச் 12 –
திருவள்ளூர் மசூதி தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி.பாஜக செயற்குழு உறுப்பினரான இவர் திருவள்ளூர் வடக்கு ராஜ வீதி பகுதியில் பால் நிலையம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் வழக்கம் போல் கடைகளில் பால் விநியோகம் செய்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை கடைக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 ரூபாய் மதிப்பிலான ஐஸ்கிரீம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதேபோல் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ரவிச்சந்திரன் வழக்கம் போல் 9 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றவர் காலையில் வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உள்ளே சென்று பார்த்தபோது கடையில் ரூ.19 ஆயிரம் ரொக்கம் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் சிசிடிவி கேமராவை கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பாபி, சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து கொள்ளையடித்த மர்ம நபர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் நகர காவல் நிலையம் அருகில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.