டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு 19ம் தேதி வரை தொடர் விடுமுறை
தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை பாதுகாப்பாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பதட்டமான வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக இன்று காலை 10 மணி முதல் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு 19ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே போல் வாக்குஎண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்ரவரி 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. மக்களின் பாதுகாப்பிற்காகவும், தேர்தலை நேர்மையாக நடத்த உதவி புரியும் வகையிலும் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அதன்படி இன்று பிப்ரவரி 17ம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 19 நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான பிப்ரவரி 22 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் சென்னையிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களும் மூடப்படும் என அறிவித்துள்ளார். விடுமுறை தினங்களில் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விடுமுறை டாஸ்மாக் கடைகளுக்கு தினங்களாக இருப்பதால், நேற்றே குடிமகன்கள் மதுபான கடைகளில் குவியத் தொடங்கி விட்டனர். கைக்கொள்ளாமல், துணிப்பைகளைக் கொண்டு வந்து பலரும் அதிகளவில் வாங்கிச் செல்வதைக் காண முடிந்தது. வழங்கமாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதைப் போல நேற்று எலைட் மதுபான கடைகளிலும் கூட்டம் கூடி, அதிகளவில் மதுப்பாட்டில்களை வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.