‘நீட்’ விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார்

Loading

சென்னை,

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நீட் தேர்விற்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் உள்ள நிலையில், தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியம் இல்லை என்ற கொள்கை முடிவை கடந்த அ.தி.மு.க. ஆட்சி எடுத்திருந்தது. என்றாலும், நீட் தேர்வுகள் தமிழகத்தில் நடத்தப்பட்டு வந்தன.

பா.ஜனதாவை தவிர மற்றவர்கள் எதிர்ப்பு

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வியை வழங்குவதில் உள்ள நன்மைகளை ஒரு சாராரும், தீமைகளை மற்றொரு சாராரும் தமிழகத்தில் தொடர்ந்து எடுத்துரைத்து வருகின்றனர். தமிழகத்தில் பா.ஜ.க. தவிர மற்ற அனைத்து கட்சிகளுமே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்ய சட்டம் இயற்றப்படும் என்று தி.மு.க. கூறியிருந்தது. சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற முதல் நாளில் இருந்தே, நீட் தேர்வை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள், குறிப்பாக அ.தி.மு.க. எழுப்பி வருகிறது. நீட் தேர்வை எழுத தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் மாணவர்கள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.

உயர்மட்ட குழு அறிக்கை

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அரசு அமைத்து, நீட் தேர்வினால் ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? என்பதை கண்டறிய உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து 86 ஆயிரத்து 342 பேரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்தும், பல்வேறுதரவுகளை கொண்டும், தனது விரிவான பரிந்துரைகளை ஏ.கே.ராஜன் குழு கடந்த ஆண்டு ஜூலை 14-ந் தேதி அரசுக்கு அளித்தது.

பரிந்துரைகள் என்ன?

அந்தப் பரிந்துரைகளில், எம்.பி.பி.எஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது. குறிப்பாக, அரசுப்பள்ளி மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக கொண்டுள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பட்டியலின பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தகுதி அல்லது தரத்தை நீட் தேர்வு உறுதி செய்வதாகத் தெரியவில்லை என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும், 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைச் சட்டத்தை போன்ற ஒரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி அதற்காக ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறலாம் என்றும் உயர்மட்டக் குழு பரிந்துரைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் அரசு செயலாளர்களை கொண்ட குழு கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி அமைக்கப்பட்டது.

அந்த குழு, 2007-ல் தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்தைப் போன்று மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கு நீட் தேர்வை விலக்குவதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு சட்டம் இயற்றி, சட்டசபையின் ஒப்புதல் பெற்று, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும் என்று தெரிவித்தது.

சட்ட மசோதா தாக்கல்

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி சட்டசபை கூட்டத் தொடரில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்ட மசோதா மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில கருத்துகளை தெரிவித்தார். அவர், மருத்துவக் கல்வியின் தரத்தை நீட்தேர்வு மேம்படுத்துகிறது என்பதும் தவறாது. கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே, அதிக மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களை கொண்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருந்தது.

இந்த நிறுவனங்களிடம் இருந்து பட்டம்பெற்ற மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் மிகவும் திறமையானவர்களாக விளங்கினர். எனவே, மேல்நிலைப்பள்ளி பாடத்திட்டம் போதுமான தரத்தில் இருக்கும்போது, தகுதித்தேர்வு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்த வகையிலும் கல்வித்தரத்தை குறைக்காது.

மேலும், பள்ளி்த்தேர்வு மதிப்பெண்களை நெறிமுறைப்படுத்தும் முறை மூலம் சரி செய்யப்பட்டால், அது முறையான, நியாயமான, நடுநிலையான சேர்க்கை முறையை வழங்கும். மருத்துவப்படிப்புகளுக்கான சேர்க்கையை, இந்திய அரசியலமைப்புப்படி, மாநில அரசே முறைப்படுத்த தகுதியுடையதாகும். எனவே, இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த புதிய சட்ட முன்வடிவில், மருத்துவ இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கும் இடங்கள் ஆகியவற்றுக்கு 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடத்த முன்மொழியப்படுகிறது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது.

குழுவின் பரிந்துரையை பரிசீலித்து, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மாணவர்களைப் பாதுகாக்கவும், கிராமப் பகுதிகளில், வலுவான சுகாதாரக் கட்டமைப்பை உறுதி செய்யவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ள இச்சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று பேசினார்.

அனுப்பப்படவில்லை

இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வு அவசியமானது என்பதை எடுத்துரைத்தும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அங்கிருந்த கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த மசோதாவை தமிழக கவர்னர் அலுவலகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது.

அதன் பின்னர் செப்டம்பர் 18-ந் தேதி தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றார். அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடந்து கொள்வதாக, அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நிலையில், அந்த சட்ட மசோதா ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு அனுப்பப்படாமல் இருந்து வந்தது. எனவே அதை உடனே ஜனாதிபதியிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

சபாநாயகர் கருத்து

சில வாரங்களுக்கு முன்பு சிம்லாவில் நடந்த அனைத்து சபாநாயகர்களின் மாநாட்டில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு உரையாற்றினார். அப்போது, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவில் முடிவெடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு கால அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மக்களின் கருத்துகளின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவது, அவர்களின் நலனுக்கு எதிரானது என்றும் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 27-ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார். அப்போது நீட் மசோதா பற்றி அவர் வலியுறுத்தினார்.

கவர்னர் நிராகரிப்பு

இந்த நிலையில், கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா; அந்த மசோதாவிற்கு அடிப்படையாக இருந்த, இந்த மாநில அரசினால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கை ஆகியவற்றை கவர்னர் விரிவாக ஆய்வு செய்தார்.

மேலும், மருத்துவக் கல்வி சேர்க்கையில், குறிப்பாக சமூக மற்றும் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வதில் நீட் தேர்விற்கு முந்தைய நிலையில் இருந்த சமூகநீதி பற்றியும் கவர்னர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த மசோதா, மாணவர்களின் நலனுக்கு குறிப்பாக, ஊரகப் பகுதியைச் சேர்ந்த மற்றும் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்ற கருத்திற்கு வந்துள்ளார்.

எனவே அந்த சட்ட மசோதாவை தமிழக சட்டசபை சபாநாயகருக்கு 1-ந் தேதியன்று திருப்பி அனுப்பிவிட்டார். அதோடு, அந்த மசோதா மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதற்கான விரிவான காரணங்களை குறிப்பிட்டுள்ளார்.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான வழக்கில், விரிவான ஆய்வை, அதிலும் சிறப்பாக சமூகநீதி தொடர்பான கோணத்தில் சுப்ரீம் கோர்ட்டு நடத்தியது. அதன் பிறகு, ஏழை மாணவர்களின் பொருளாதார சுரண்டலை தடுக்கக் கூடியது என்றும், சமூக நீதியை முன்னெடுத்துச் செல்லவும் நீட் தேர்வை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *