கடன் வாங்கி சொகுசு வாழ்க்கை… 30 லட்சம் கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய இளைஞர் கைது
சென்னை: குறும்படம் எடுப்பதாக கூறி கடன் வாங்கி சொகுசாக சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர் அந்த கடனை அடைப்பதற்காக தன்னை கடத்தி விட்டதாக நாடகமாடி பெற்றோரிடம் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் வசமாக மாட்டிக்கொண்டார் அந்த இளைஞர்.
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அந்த இளைஞரின் பெயர் கிருஷ்ண பிரசாத். இவர் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வசிக்கும் பென்சிலய்யா என்பவரின் மகனாவார். கடந்த 13ஆம் தேதியன்று உறவினர் மகனோடு வடபழனியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
இதனையடுத்து பென்சிலய்யாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும் 30 லட்சம் பணம் கொடுத்தால் விட்டு விடுவதாகவும் போனில் பேசிய நபர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பென்சிலய்யா, வடபழனி காவல்நிலையத்திற்கு சென்று மகனை யாரோ கடத்தி விட்டதாகவும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்தார்.
அவரது புகாரின் வடபழனி காவல் உதவி ஆணையர் பாலமுருகன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கிருஷ்ணபிரசாத்தின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த போது அது தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருப்பதாக காட்டியது. இதனையடுத்து செகந்திராபாத் சென்ற போலீசார் சாலையில் நடந்து சென்ற கிருஷ்ணபிரசாத்தை பத்திரமாக மீட்டனர். சென்னை வடபழனி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், பெற்றோரிடம் பணம் பறிப்பதற்காக தான் கடத்தல் நாடகம் ஆடியதாகவும் கிருஷ்ணபிரசாத் கூறினார்.
பிஏ பொருளாதாரம் படித்துள்ள கிருஷ்ண பிரசாத் குறும்படம் எடுப்பதாக கூறி நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்த கிருஷ்ணபிரசாத் திட்டமிட்டு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். 13ஆம் தேதி உறவினர் மகனோடு ஃபோரம் மால் சென்றுள்ளார் கிருஷ்ண பிரசாத். காரில் உறவினர் மகனை இருக்க சொல்லி விட்டு தான் ஏவிஎம் நிறுவனத்திற்கு சென்று சினிமா வாய்ப்பு கேட்க செல்வதாக கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்பில் மிரட்டல் சிறிது நேரம் கழித்து விட்டு தன்னை சிலர் கடத்தி விட்டதாக உறவினர் மகனிடம் போனில் கூறிவிட்டு சுவிட்ச் ஆஃப் செய்து விட்டார். கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று பேருந்து மூலம் செகந்திரபாத் சென்று அங்கே லாட்ஜில் ரூம் போட்டு தங்கினார். அங்கிருந்து போன் மூலம் தனது பெற்றோர்களுக்கு பேசி தன்னை சிலர் கடத்தி வைத்திருப்பதாகவும் ரூ. 30 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறினார். வாட்ஸ் அப்பில் குரலை மாற்றி பேசி, ரூ. 30 லட்சம் பணம் தராவிட்டால் மகனை கொலை செய்து உடல் உறுப்புகளை விட்டு ரூ. 30 லட்சம் பணத்தை எடுத்துக்கொள்வதாக பெற்றோரிடம் கூறியதாகவும் காவல்துறையினரிடம் கிருஷ்ணபிரசாத் கூறினார். Ads by அடித்து உதைத்த பெற்றோர் கிருஷ்ணபிரசாத்தின் பெற்றோருக்கு வடபழனி காவல்நிலைய தகவல் அளிக்கவே, அவர்கள் உடனடியாக காவல் நிலையம் வந்து மகனை அடித்து உதைத்தனர்.
கிருஷ்ணபிரசாத்தின் எதிர்காலம் குறித்து பெற்றோர் கவலை தெரிவிக்கவே, இதுபோல் வேறு தவறான செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று நல்லெண்ண அடிப்படையில் காவல்துறையினர் எழுதிவாங்கிக்கொண்டு எச்சரித்து பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.