நரசிங்கர் கோவில் அற்புதங்கள்

Loading

மகப்பேறு தரும் கதலி நரசிங்கர் கோவில்

முன்பு ஒரு காலத்தில், செண்பக மரங்கள் நிறைந்த பகுதியாக இந்த ஊர் இருந்ததால் ஜம்புலிபுத்தூருக்கு, ‘செண்பக வனம்’ என்றும் பெயர் உண்டு பாம்பு புற்றினுள் வாழைப்பூ வடிவில் கல் விக்கிரகமாக எம்பெருமான் சுயம்புவாக தரிசனம் கொடுத்து அவதரித்ததால், ‘கதலி நரசிங்கர்’ (கதலி என்றால் வாழை!) என்ற பெயரில் அந்தத் தெய்வத்தை வழிபட ஆரம்பித்தனர். அழகிய தெப்பக்குளத்துடன் அழகாக அமைந்திருக்கிறது ஆலயம்.

ஸ்தல விருட்சம் நாவல் மரம். முகப்பில் பந்தக்கால் மண்டபம். சிற்பங்களுடன் கூடிய சிறிய கோபுரத்துடன் திகழ்கிறது. உள்ளே நுழைந்ததும் ஸ்தம்பம் மற்றும் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கடந்து சென்றால் சிற்ப தூண்களுடன் திகழும் மகா மண்டபம். இங்கு கதலி நரசிங்க பெருமாளை நோக்கி மேற்கு பார்த்த சிறியதும் பெரியதுமாக சிறிய சன்னதியில் இரண்டு கருடாழ்வார்களின் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் ஒரு கருடாழ்வார் விக்கிரகம் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும்.

இத்திருத்தலத்தில் மட்டும் இரு கருடாழ்வார்கள் உள்ளனர். இவர்களை வணங்கி இடப்புறம் திரும்பினால் நின்ற திருக்கோலத்தில் காலபைரவர். விசேஷ நாட்களில் இவருக்கு வடை மாலை சார்த்தி வழிபடுகிறார்கள். பைரவர் வரம் தருவதில் மிகவும் வல்லவர் என்கிறார்கள். அதன் அருகில் தெற்கு நோக்கிய சந்நிதியில், இருகரம் கூப்பியபடி காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்.

இவரை மனமார பிரார்த்தித்துச் சென்றால் மகப்பேறு வாய்க்கும் என்பது பக்தர்களது நம்பிக்கை. அப்படி, தங்களது வேண்டுதல் பலித்தவர்கள் இவருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டுச் செல்கின்றனர். அடுத்து, பெரிய முன்மண்டபம் தாண்டினால் முத்து மண்டபம்.

இதன் வடக்கு மூலையில், தெற்கு நோக்கி காட்சி தருகிறார் சேனை முதல்வர். உற்சவ காலங்களில் இவருக்கே முதல் மரியாதை. கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக வரதராஜர், நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம். முன் வலக்கரம் அபய ஹஸ்தம் காட்ட,முன் இடக்கரத்தை தொடை மீது வைத்து, நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

0Shares

Leave a Reply