“குழந்தைகளின் விஷயத்தில் பாதகமான எதிர்விளைவுகளைக் கையாள்வதில் நாட்டின் தற்போதைய கண்காணிப்பு அனுபவம் பெரிதும் உதவியது” – டாக்டர் என் கே அரோரா

Loading

– டாக்டர் என் கே அரோரா
நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் கொவிட் -19 பணிக்குழு தலைவர்

கொவிட் -19 பணிக்குழுவின் முக்கிய உறுப்பினரான டாக்டர் என் கே அரோரா, இதுவரையிலான கொவிட்-19 தடுப்பூசிகளின் பயணம் குறித்தும், தற்போதும், எதிர்காலத்திலும் இந்தியாவிற்கு இதனால் என்ன பயன் என்பது பற்றியும் பேசுகிறார்.
10 மாதங்களுக்குள் 100 கோடி தடுப்பூசி எனும் மைல்கல்லை நாடு எட்டியுள்ளது. நாட்டில் பெருந்தொற்றுநோய்களின் போக்கை இது எவ்வாறு மாற்றப் போகிறது?
இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. இந்த மைல்கல்லை எட்ட எங்களுக்கு உதவிய மிகப்பெரிய காரணி தடுப்பூசி தற்சார்பு ஆகும். நாட்டிலேயே நம்மால் தடுப்பூசிகளை உருவாக்கி உற்பத்தி செய்ய முடியும் என்பதால், இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு நம்மால் தடுப்பூசி போட முடிந்தது.

ஒரே இரவில் இது அடையப்படவில்லை; இது ஒன்றரை வருட சிந்தனை, செயல்பாடு மற்றும் கடின உழைப்பின் விளைவாகும்.
நம் நாட்டில், 94 கோடிக்கும் மேற்பட்ட பெரியவர்கள் தடுப்பூசி பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். பல மாநிலங்களில், வயது வந்தோர் அனைவருக்கும் ஒரு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய தடுப்பூசி விநியோக திறன், தடுப்பூசி உற்பத்தி மற்றும் கிடைக்கும் நிலை ஆகியவற்றை கணக்கிட்டால், அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 70 முதல் 80 கோடி பேர் வரை கொடுக்கலாம்.

நம் நாட்டில் பெருந்தொற்றின் எதிர்கால போக்கு ஐந்து விஷயங்களைப் பொறுத்துள்ளது. ஒன்று, மக்கள் கொவிட் முறையான நடத்தைமுறையை எவ்வளவு திறம்பட பின்பற்றுகிறார்கள் என்பதாகும். இரண்டாவதாக தடுப்பூசிகளின் கிடைக்கும் தன்மை விளங்குகிறது. மூன்றாவதாக, இரண்டாவது அலையின் போது இயற்கையான தொற்றுக்கு ஆளான மக்கள்தொகையின் சதவீதம். நான்காவது, வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் ஏதேனும் புதிய வகைகளின் தோற்றம். ஐந்தாவது, எந்தவொரு எதிர்கால எழுச்சிக்கும் சுகாதார அமைப்பின் தயார்நிலை.
இரண்டாவது அலையின் போது, நாடு முழுவதும் 70 முதல் 85 சதவீதம் வரையிலான மக்களுக்கு தொற்று ஏற்பட்டது. மேலும், கடந்த நான்கு மாதங்களில் புதிய வகை எதுவும் தோன்றவில்லை. தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை, ஆக்ஸிஜன் சப்ளை, உயிர்காக்கும் மருந்துகள் கிடைத்தல், பொது-தனியார் கூட்டாண்மை மூலம் கண்டறியும் வசதிகள் ஆகியவற்றை வலுப்படுத்த மாபெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது, முறையான கொவிட் விதிமுறைகளை, குறிப்பாக வரவிருக்கும் பண்டிகைகளின் போது பின்பற்றுவது மக்களின் கைகளில் உள்ளது. விதிமுறைகளை பின்பற்றுவது பாதிப்பை குறைத்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு பெரியளவில் உதவும் என்று நான் உறுதியாக உணர்கிறேன்.
குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், தடுப்பூசியை உருவாக்குவதில் அது பிரபலமாக இருக்கவில்லை. இருப்பினும், பெருந்தொற்றின் போது, பல தடுப்பூசிகளை இந்தியா உருவாக்கியது. எவ்வாறு இது சாத்தியமாக்கியது?
கடந்த இரண்டு தசாப்தங்களில், அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கான உள்கட்டமைப்பை வளர்ப்பதில் நாடு பெரிய முன்னேற்றங்களை கண்டுள்ளது. புதிய தடுப்பூசிகளின் அடிப்படை ஆராய்ச்சி மற்றும் உருவாக்கலை ஊக்குவிக்கும் முடிவை கடந்த ஆண்டு எடுத்தபோது உண்மையான மாற்றம் தொடங்கியது. மார்ச் 2020-ல், பெரிய நிதி முதலீடு செய்யப்பட்டது, உகந்த சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டது. விஞ்ஞானிகள் மற்றும் தொழில் முனைவோர் ஒன்றிணைந்து புதிய தடுப்பூசிகளை உருவாக்க இது ஊக்குவித்தது. சர்வதேச பங்குதாரர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பல்வேறு அறிவியல் ஆய்வகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பரிமாற்றத்திற்கு காரணமாக அமைந்தது.

இதன் விளைவாக, பெருந்தொற்று தொடங்கிய 10 மாதங்களுக்குள் நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தை தொடங்க இந்தியாவால் முடிந்தது. இன்று, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு தடுப்புமருந்துகள் நம் நாட்டிற்காகவும் வெளிநாடுகளுக்கும் தயாரிக்கும் வலுவான அமைப்பை நாடு கொண்டிருக்கிறது.
இந்த தடுப்பூசிகள் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது, அதாவது அவற்றின் நீண்டகால தாக்கத்தை ஆய்வு செய்வதற்கு முன்பு அவை மக்களுக்கு கிடைக்கச் செய்யப்பட்டன. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
2020 ஜூன்-ஜூலை மாதங்களிலிருந்து, தடுப்பூசிகளின் சாத்தியமான விளைவுகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் விவாதிக்கத் தொடங்கினர். செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள், இந்தியாவில், வயது வந்தோருக்கான தடுப்பூசி காரணமாக ஏற்படக்கூடிய தீமைகளைத் தடுப்பதற்காக, தேசிய மட்டத்தில் இருந்து மாவட்ட அளவு வரை விரிவாக்கப்பட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் பொது மருத்துவர்கள், நுரையீரல் நிபுணர்கள், இருதயநோய் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள், கல்லீரல் மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். நாடு முழுவதும் உள்ள ஏஇஎஃப்ஐ உறுப்பினர்களுக்கான ஆய்வு மற்றும் பயிற்சி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. டிசம்பர் மாதத்திற்குள், அவர்களில் பெரும்பாலோர் பயிற்சி பெற்றனர். பாரம்பரியமாக பாதகமான நிகழ்வுகள் என அறிவிக்கப்பட்ட மருத்துவ நிலைகளை உள்ளடக்கிய ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதே சமயம், புதிய தடுப்பூசியால் ஏற்படக்கூடிய விளைவுகளும் சேர்க்கப்பட்டன. சிறப்பு கவனம் பெற்ற பாதகமான நிகழ்வுகள் (ஏஈஎஸ்ஐ) என்றும் இவை அழைக்கப்பட்டன.

எந்தவொரு எதிர்மறையான நிகழ்வையும் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு புறநகர் மருத்துவமனைகள் அல்லது மாவட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் தடுப்பூசி வழங்குநர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோரிடையே ஏற்படுத்தப்பட்டது.
குழந்தைகளின் விஷயத்தில் பாதகமான எதிர்விளைவுகளைக் கையாள்வதில் நாட்டின் தற்போதைய கண்காணிப்பு அனுபவம் பெரிதும் உதவியது.
இந்த பயிற்சியை எளிதாக்குவதில் உலக சுகாதார அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. அவர்களது தேசிய அலுவலகத்தில் உள்ள தடுப்பூசி-பாதுகாப்புப் பிரிவு தொழில்நுட்ப மற்றும் தளவாட ஆதரவை வழங்கியது.
ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் தடுப்பூசி போடப்பட்ட பிறகு 30 நிமிடம் உட்கார்ந்து இருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அனாபிலாக்ஸிஸ் போன்ற எந்தவொரு கடுமையான எதிர்வினைகளையும் உடனடியாக எதிர்கொள்வதோடு, அத்தகையோரை அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு அனுப்புவதே இதன் நோக்கம். இந்த அணுகுமுறை பல நூறு உயிர்களைக் காப்பாற்றியது. தடுப்பூசி பெற்ற 28 நாட்களுக்குள் ஏற்படும் எந்தவொரு மருத்துவ நிகழ்வு அல்லது நோயும் மேலதிக விசாரணைக்கு ஏஈஎஃப்ஐ (தடுப்பூசிக்கு பின்னர் ஏற்படும் பாதகமான விளைவு) என அறிவிக்கப்பட வேண்டும், மேலும், இது தடுப்பூசியுடன் தொடர்புடையதா என்பதை தீர்மானிக்க வேண்டும். வழக்கமான கண்காணிப்பு தகவல்களுக்கு வலு சேர்க்க, மருத்துவமனைகள் மற்றும் சமூக தளங்களில் நாடு முழுவதும் 20 முதல் 25 இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசிகளின் நீண்ட கால விளைவுகளுக்கான சாத்தியக்கூறுகளை தடுக்க இது உதவும்.

தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மக்களை நம்ப வைப்பது எவ்வளவு கடினமாக இருந்தது?
தடுப்பூசி தயக்கத்தை போக்கிய போலியோ ஒழிப்புக்கான நீண்ட பிரச்சாரம், கொவிட் -19 தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை எதிர்கொள்ள நாட்டை தயார் செய்தது. தடுப்பூசி போடும் பணி தொடங்குவதற்கு முன்பே, சமூக அணிதிரட்டலை கடந்த ஆண்டு அக்டோபரில் அரசாங்கம் தொடங்கியது. தொலைக்காட்சி சேனல்கள், அச்சு ஊடகங்கள், இணைய கருத்தரங்குகள், வானொலி நிகழ்ச்சிகள், நேரடி தொடர்பு உள்ளிட்டவற்றின் மூலம் உண்மை அடிப்படையிலான, அறிவியல் தகவல்களைப் பரப்புவதற்கு 360 டிகிரி அணுகுமுறையை அரசு எடுத்தது. தவிர, பல முக்கிய பிரமுகர்கள், மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் பொதுமக்களுடன் வலுவான தொடர்பைக் கொண்டிருப்பதால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
முதல் முறையாக, வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் மிகவும் நெருக்கமாக, கண்காணித்து, பின்தொடர்ந்து, பகுப்பாய்வு செய்து முறையான முறையில் எதிர்கொள்ள சமூக ஊடக ஸ்கேனிங் செயல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி தயக்கமும் ஒரு தொற்று நோயைப் போன்றது என்பதை நான் உறுதியாக உணர்கிறேன், அதை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அது ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவுகிறது.
மீதமுள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவது எவ்வளவு எளிது அல்லது கடினம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இந்தியாவில் 94 கோடி பெரியவர்கள் உள்ளனர். முழு மக்கள்தொகைக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு சுமார் 190 கோடி டோஸ் தேவைப்படுகிறது. தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். உண்மையில், இப்போது நாம் தடுப்பூசி தயக்கத்தை அல்ல, தடுப்பூசி ஆர்வத்தை பார்க்கிறோம். ஆனால் இது ஒரு கடினமான பாதையாக இருக்கலாம், ஏனெனில், தயக்கமுள்ள மக்கள் குழுக்களை நாம் சந்திக்கலாம். சூழ்நிலை காரணிகளை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் முழு தடுப்பூசி வழங்கலை நாடு அடைய உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *