தஞ்சையில் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், செப். 15: தபால் காரர்களை வணிக இலக்கு என்ற பெயரில் நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயிக்கும் அஞ்சல் துறை நிர்வாகத்தை கண்டித்து அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் தபால்காரர்கள் மற்றும் பன்முக திறன் ஊழியர்கள் சார்பில் தஞ்சையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை கோட்ட செயலாளர் பஞ்சநாதன் துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், தபால் காரர்களை வணிக இலக்கு என்ற பெயரில் நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயிக்கும் அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முன்னதாக கோட்ட செயலாளர் செல்வகுமார், மாநில உதவித் தலைவர் சாகுல் அமீது, மாநில உதவி செயலாளர் வெங்கடேசன், கோட்ட பொருளாளர் குணசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் புண்ணிய குமார் நன்றி கூறினார்.