குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
![]()
குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
காஞ்சிபுரம் அருகே குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த 20 வயது இளம்பெண் 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு அடிக்கடி வந்து செல்லும், வணிகர் வீதியை சேர்ந்த குணசீலன் என்பவர், அந்த பெண்ணுக்கு நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவரது செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். இதனையடுத்து தொடர்ந்து அவரிடம் பேசி அவருக்கு காதல் வலை வீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குணசீலன் தன்னுடைய பூர்வீக சொத்து இருக்கும் மேல்கதீர்பூர் கிராமத்திற்கு தனது காரில் வற்புறுத்தி அழைத்துச் சென்றதாக தெரிகிறது. காரில் செல்லும் போது, வழியில் குளிர்பானத்தில் மதுகலந்து கொடுத்ததால் அவர் மயக்கமடைந்துள்ளார். மேல்கதிர்பூர் கிராமத்தில் தனக்கு சொந்தமான பம்புசெட் பகுதிக்கு தனது நண்பர்கள், ஜெபநேசன், குணசேகரன், அஜித் மற்றும் காமராஜ் ஆகியோரை வரவழைத்த குணசீலன், அங்கு காரில் வைத்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வலி தாங்க முடியாமல் அந்த பெண் காரின் கண்ணாடியில் அடித்து கூச்சல் போட்டதை அறிந்து வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் திரண்டதால் அந்த கொடூரர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து அந்த இளம்பெண் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலுசெட்டி சத்திரம் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் இளம்பெண்ணிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில், தொழிலதிபர் குணசீலன், அஜித் மற்றும் வழக்கறிஞர்கள் ஜெபநேசன், குணசேகரன் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

