மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் மீது அதிமுக ஆட்சி காலத்தில் போட்ட அனைத்து வழக்குகளும் ரத்து…

Loading

சென்னை

கடந்த அஇஅதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி முறைகேட்டிலும் ஊழலிலும் ஈடுபட்டார் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வாங்கிய தகவலகளின் அடிப்படையில் மூத்த பத்திரிக்கையாளரும் , மக்கள் செய்தி மையம் இணைய தள இதழின் ஆசிரியருமான வி.அன்பழகன் செய்தி வெளியிட்டார் .

மேற்படி செய்தியின் தொடர்ச்சியாக தன்னைப் பற்றி அன்பழகன் மூலம் எந்த செய்தியும் வெளிவரக் கூடாது என்று வேலுமணி கடந்த 20.04.2017 அன்று தனது வழக்கறிஞர் S. துரைசாமி மூலம் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பினார் . 24.04.2017 அன்று வேலுமணியின் சகோதரர் அன்பரசன் தன்னைப் பற்றியும் , தன் சகோதரர் வேலுமணி பற்றியும் செய்தி வெளியிட கூடாது என்று நிரந்தர உறுத்துக்கட்டளை கோரியும் , 5 கோடி நஷ்ட ஈடு கேட்டும் C.S.No.378 / 2017 என்ற வழக்கினை தாக்கல் செய்தார் . இதற்கிடையே அன்பழகன் 27.04.2017 அன்று ஆலந்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார் .

இதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் நிலையத்தில் 6 வழக்குகள் , தாம்பரம் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் , கோவை உக்கடம் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும் , திருவேற்காடு , மதுரவாயல் , துடியலூர் , குனியமுத்தூர் , கோவை சாய்பாபா காலனி , கோவை புதூர் , பெரியமேடு , R.S. புரம் ஆகிய காவல் நிலையங்களிலும் தலா ஒரு வழக்கு என்று மொத்தம் 23 வழக்குகள் தொடர்ச்சியாக 10 நிமிடத்திற்கு ஒரு வழக்கு என்ற வகையில் இரண்டு நாட்களில் தாக்கல் செய்யப்பட்டது . மேற்கண்ட வழக்குகள் யாவும் . பத்திரிக்கையாளர் அன்பழகன் அவர்கள் பணம் கேட்டதாகவும் , பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களை பற்றி தவறான செய்திகள் எழுதப் போவதாக மிரட்டியதாகவும் , உள்ளாட்சி துறையில் பதவியில் இருக்கும் பலவேறு அதிகாரிகள் மூலம் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது . கடந்த 18.05.2017 அன்று அன்பழகன் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் . மேற்படி வழக்கு ( குண்டர் தடுப்பு சட்டம் ) 17.08.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது . வேலுமணியின் சகோதரர் அன்பரசன் 5 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கிற்கும் சிறையில் இருந்தே பதில் மனு தாக்கல் செய்தார் அன்பழகன்

இது மட்டுமல்லாமல் பொறியியல் கல்லூரி மாணவரான அன்பழகனின் மகன் தமிழ்ச் சிற்பி மீதும் இது போன்ற ஒரு வழக்கு ( Crime No. 30/2020 ) குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு கடந்த 09.09.2020 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது . தொடர்சியான மன உளைச்சலால் தனது தாயாரையும் இழந்தார் . அன்பழகன் தன் மீது போடப்பட்ட 23 வழக்குகளை ரத்து செய்ய வழக்கு போட்டார் .

மேற்கண்ட 23 வழக்குகளையும் விசாரிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவினை பலவேறு தேதிகளில் பிறப்பித்தது . மேற்படி வழக்குகள் மாண்புமிகு நீதிபதி M. தண்டபாணி அவர்கள் முன்பு இறுதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது .

இவ்வழக்குகளில் மனுதாரர் அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் E. ஓம்பிரகாஷ் மற்றும் வழக்கறிஞர் S. குமார தேவன் ஆகியோர் ஆஜராகினர் . அரசு தரப்பில் வழக்கறிஞர் கோபி ஆஜரானார் . சில எதிர்மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் V. இளங்கோவன் ( முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி வழக்கறிஞர் ) ஆஜரானார் . கடந்த 27.06.2021 அன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது . இன்று மேற்கண்ட வழக்குகளின் தீர்ப்பு வெளியிடப்பட்டு அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது . இதன் மூலம் முன்னாள் அமைச்சர் S.P. வேலுமணி தனது துறையில் செய்த முறைகேடுகள் வெளியே தெரியாமல் இருக்க பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்கு போட்டது அம்பலமாகியுள்ளது . – மக்கள் செய்தி மைய நிருபர்கள் குழு தெரிவித்துள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *