கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிவகங்கையில் மருத்துவம் பெறலாம். மருத்துவக் குழு தகவல்.
சிவகங்கை , ஜூன்-24.
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெறலாம் என மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 16- பேர் கருப்புப் பூஞ்சை நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 2-பேர் நோய் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர் . மீதம் உள்ள 14-நோயாளிகளில் 4-பேருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருப்புப் பூஞ்சை நோய்க்கு 3-துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் 40-பேர் கூட்டாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த மருத்துவ குழுவிற்கு தலைவராக காது , மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் நாகசுப்பிரமணியம் பொறுப்பில் இருந்து செயல்பட்டு வருகிறார். கொரோனா வந்து சென்றவர்களும், சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாதவர்களும் , சைனஸ் தொந்தரவு உள்ளவர்களும், கண்ணைச் சுற்றி வீக்கம் உள்ளவர்களும், மூக்கில் ரத்தக் கசிவு ஏற்பட்டவர்களும், சளி, அதிக தலைவலி உள்ளவர்களும் , முழுமையான தீர்விற்கு மருத்துவமனைக்கு வர வேண்டும். நோய் ஏற்பட்டவுடன் ஆரம்பத்திலே யே சிகிச்சைக்கு வரவேண்டும். இவர்களுக்கு சிறப்பு பரிசோதனை செய்து நோய் குணப்படுத்தப்படும். இந்த நோய்க்கு அதிக விலையுள்ள மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு கொரோனா நோய் ஏற்பட்டால் அதற்கு மருந்தும், சிறப்பு சிகிச்சை வார்டும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.