ஆவடியில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் சிறப்பு மருத்துவ முகாம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு
திருவள்ளூர் ஜூன் 19 : திருவள்ளுர் மாவட்டம், ஆவடியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்கள பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை வழங்கி, கொரோனா தடுப்பூசிகள் போடும் சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், நடுகுத்தகை ஊராட்சியில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தனியார் சங்கத்தின் பங்களிப்புடன் 5 கிலோ அரிசி மற்றும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை முனகளபணியாளர்களுக்கு சமூக இடைவெளியினை கடைபிடித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, திருநின்றவூர் பேரூராட்சி, பிரகாஷ் நகர் பகுதியில் மற்றும் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், நெமிலிச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளியிலும், மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறை சார்பாக நடைபெற்ற தடுப்பூசிகள் போடும் சிறப்பு மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருவள்ளுர் சுகாதார மாவட்டம் மற்றும் பூவிருந்தவல்லி சுகாதார மாவட்டத்தில் முதற்கட்டமாக 2,95,146 நபர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 67,026 நபர்களுக்கும் ஆக மொத்தம் 3,62,172 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இத்தடுப்பூசிகள் 18 முதல் 45 வயது வரை, 45 வயது முதல் 60 வயது வரை மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என மூன்று பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் போதுமான அளவு தடுப்பூசிகள் தற்சமயம் பெறப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேசிங்கு, பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், நெமிலிச்சேரி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்செல்வி, பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், தனியார் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.