தமுமுகவின் தன்னலமற்ற சேவை கொரோனாவில் இறந்த 59 உடல்களை அடக்கம் செய்துள்ள இளைஞர்கள்
தமுமுக தலைவரும் பாபநாசம் எம்எல்ஏவுமான பேராசிரியர் ஜவாஹிருல்லாவின் வழிகாட்டுதலோடு, வேலூர் மாவட்டம்- குடியாத்தத்தில் தமுமுகவைச் சேர்ந்த 24 இளைஞர்கள் 3 குழுவாகப் பிரிந்து இதுவரையில் 59 உடல்களை அடக்கம் செய்துள்ளனர். இதுதவிர, பல உடல்களை தகனம் செய்ய உதவியும் செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சாதாரணமாக இறப்பவர்களின் இறுதிச் சடங்குக்கே உறவினர்கள் வர தயக்கம் காட்டும் நிலையில், ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி தமிழ்நாடு முழுவதும் தமுமுகவினர் நேசக்கரம் நீட்டிவருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுகவின் குழுவினர் கொரோனாவால் இறப்போர் சடலங்களை அடக்கம் செய்துவருகின்றனர். இதுவரையில் 4,500-க்கும் மேற்பட்ட சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதோடு, ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல், ரத்த தானம் வழங்குதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் சி30 வழங்குதல் என்று பல்வேறு மருத்துவ உதவிகளை உயிரை பணயம் வைத்து செய்துவருகின்றனர்.
இதுபோன்ற உதவிகளை வேலூர் மாவட்டம்- குடியாத்தத்திலும் 24 இளைஞர்களை கொண்ட குழுவினர் செய்துவருகின்றனர் என்பது பாராட்டத்தக்கது.
தமுமுக வேலூர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் பி.எஸ்.நிஜாமூத்தின் தலைமையில், ஒன்றியத் தலைவர் ஷஹாபூத்தீன், ஒன்றியச் செயலாளர் இக்பால், நிர்வாகிகள் அக்தர்பாஷா, இனாயத்பாஷா, ரபீக் அஹமத், ஷர்புத்தீன், காதர்பாஷா, ஷான்பாஷா, பைரோஸ் கான், சனாவுல்லா, இம்ரான் உள்பட பல இளைஞர்கள் 3 குழுக்களாகப் பிரிந்து, 2021-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி வரையில், 59 உடல்களை அடக்கம் செய்துள்ளனர். இதுதவிர, 50-க்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்ய உதவியும் புரிந்துள்ளனர்.
மேலும், ஆம்புலன்ஸ்களின் உதவியோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லவும் உதவி புரிந்துவருகின்றனர்.