வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள சலுகை : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தகவல்
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள சலுகை : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தகவல் :
திருவள்ளூர் ஜூன் 01 : 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை (டி) எண்.204 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் (ட்டி2) துறை நாள் 28.05.2021-ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.
அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.05.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 27.08.2021 க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 27.08.2021 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா தெரிவிக்கிறார்.