ஆத்தூர் அருகே பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகளால் நோய்த்தொற்று அபாயம்
சேலம் மாவட்டம், ஆத்தூர், நகராட்சிக்கு உட்பட்ட முல்லைவாடி பகுதியிலிருந்து கல்லாநத்தம் செல்லும் வழியில் அமைந்துள்ள NH79 தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டில் வசிஷ்ட நதிக்கரையில், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அப்பகுதியில் தேவையற்ற குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை மர்ம நபர்களால் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் துர்நாற்றம் வீசி வருகிறது. சிலர் குப்பைகளை கொட்டி விட்டு அதற்கு தீயையும் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் செல்வோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் குப்பைகளால் ஆற்றின் வளம் குறைந்து வருகிறது. இதே நிலைமை நீடித்தால் இன்னும் சிறிது காலத்தில் அப்பகுதி குப்பை காடாக காட்சியளிக்கும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இது சம்பந்தமாக ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.