புதுச்சேரி கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் கனடாவில் இருந்து வந்து தனது கல்லீரலை தானமாக வழங்கி, வயதான தந்தையின் உயிரை காப்பாற்றிய மகள். புதுச்சேரியில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்
புதுச்சேரியில் நூல் பதிப்பகம் ஒன்றில் 59 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்பட்ட கல்லீரல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே அவருக்கு நோயின் தீவிரம் அதிகரித்த காரணத்தினால், உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற சூழலில், கொரோனா காலத்தில் கல்லீரலை தானமாக பெறுவது மருத்துவ குழுவினருக்கு மிகுந்த சவாலாக இருந்தது. இதற்கிடையில் கனடா நாட்டில் கல்வி பயின்று வந்த அந்த முதியவரின் 24 வயது மகள், தனது தந்தைக்கு கல்லீரலை தானமாக அளிக்க முன்வந்தார். இதற்காக அவர் கொரோரா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 7000 மைல் பயணித்து, சென்னை வந்து தனது தந்தைக்கு கல்லீரலை தானமாக அளித்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு தந்தையும், மகளும் நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.